தருமபுரி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 28 மார்ச், 2025

தருமபுரி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.


தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (28.03.2025) மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மாநில அரசின் வழிகாட்டுதலின்படி, விவசாயிகளின் பொருளாதார மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றைச் செயல்படுத்தி, பயிர் உற்பத்தி மற்றும் விவசாயிகளின் வாழ்வாதார முன்னேற்றத்தை மேம்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.


தருமபுரி மாவட்டத்தில் இந்த ஆண்டு (25.03.2025 வரை) 15.52 மி.மீ மழை பதிவாகியுள்ளது. 2024-2025ஆம் ஆண்டிற்கு 1,72,280 ஹெக்டேர் பரப்பளவில் உணவு தானியங்கள், எண்ணெய்வித்துக்கள், பருத்தி மற்றும் கரும்பு சாகுபடிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், இதுவரை 1,68,770 ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி நடைபெற்று வருகிறது.


2024-2025ஆம் ஆண்டிற்கு நெல், சிறுதானியங்கள், பயற்கள், எண்ணெய்வித்துக்கள் உள்ளிட்ட பயிர்களுக்கு 922 மெட்ரிக் டன் விதைகள் இலக்காக நிர்ணயிக்கப்பட்ட நிலையில், மார்ச் 2025 வரை 544.50 மெட்ரிக் டன் விநியோகிக்கப்பட்டுள்ளது. உயிர் உரங்களாக அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா, ஜிங்க்பாக்டீரியா உள்ளிட்டவை 50,410 எண்ணிக்கையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. 50,860 எண்ணிக்கையிலான உயிர் உரங்கள் இருப்பில் உள்ளன.



தருமபுரி மாவட்டத்தில் 2024-2025 ஆண்டிற்கான பட்டு வளர்ச்சி திட்டத்தில் 756 ஏக்கர் மல்பரி சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு 63,131 பயிர் கடன் உதவிகள் மூலம் ரூ. 636.15 கோடி மதிப்பீட்டில் நிதி வழங்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள், விதைகள், உரங்கள் மற்றும் குடிநீர் வசதி குறித்த பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். மாவட்ட ஆட்சியர், இந்த கோரிக்கைகளைப் பற்றி உரிய நடவடிக்கை மேற்கொள்ளத் தேவையான ஆலோசனைகளை வழங்கினார்.


இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆர். கவிதா, இணை இயக்குநர் (வேளாண்மை) குணசேகரன் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர். அனைத்து விவசாய திட்டங்களும் சரிவர செயல்பட, விவசாயிகளின் குறைகள் உடனடியாக தீர்க்க, அனைத்து துறை அலுவலர்களும் தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப. அவர்கள் அறிவுறுத்தினார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad