தர்மபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி பேரூராட்சி அலுவலகத்தில் கவுன்சிலர்கள் ஆலோசனை கூட்டம் பேரூராட்சி தலைவர் எம்.ஏ. வெங்கடேசன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு தலைமை எழுத்தர் சம்பத் முன்னிலை வகித்தார். கூட்டத்தின் முக்கிய அம்சமாக பேரூராட்சியின் வரவு செலவு கணக்குகள் சமர்ப்பிக்கப்பட்டன. இதனை தொடர்ந்து, ஆலோசனைக் கூட்டத்தில் நகரின் மேம்பாட்டு பணிகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக, மாரண்டஅள்ளி பேருந்து நிலையம் மற்றும் வார சந்தை பகுதிகளில் சுங்க வசூலிக்க பொதுஏலம் விடுதல் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மேலும், திடக்கழிவு மேலாண்மை வள மீட்பு பூங்காவில் மக்காத கழிவுகளை மறுசுழற்சி செய்ய கூடம் அமைப்பது பற்றிய தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இத்துடன், 10வது வார்டு ஆணங்கிணறு தெருவில் கான்கிரிட் சாலை அமைப்பது பற்றிய தீர்மானமும் ஆலோசிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் பேரூராட்சி துணைத் தலைவர் கார்த்திகாபன்னீர்செல்வம், கவுன்சிலர்கள் சுகந்திரமேஷ், அனிதாரமேஷ், அபிராமிகாந்தி, கீதாவடிவேலு, ரீனாகுழந்தைவேல், புவனேஸ்வரிமணிகண்டன், கார்த்திகேயன், யதிந்தர், கோவிந்தன், விஸ்வநாதன், சிவக்குமார், வெங்கடேசன் உள்ளிட்ட பலர் மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
நகரின் அன்றாட தேவைகள் மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் திட்டங்கள் குறித்து கருத்துக்களை வெளிப்படுத்திய கவுன்சிலர்கள், நகர வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் பல்வேறு தீர்மானங்களை மேற்கொண்டு செயல் திட்டங்களை வடிவமைத்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக