மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 24 மார்ச், 2025

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.


தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் இன்று பெற்றுக்கொண்டு, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.


இக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் 24.03.2025 அன்று நடைபெற்றது. பொதுமக்கள் சாலை வசதி, குடிநீர் வசதி, பேருந்து வசதி உள்ளிட்ட அடிப்படை தேவைகள், பட்டா, சிட்டா பெயர் மாற்றம், குடும்ப அட்டை, வாரிசுச் சான்றிதழ், வேலைவாய்ப்பு, இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் ஓய்வூதியத் தொகை உள்ளிட்ட கோரிக்கைகளுடன் மொத்தம் 633 மனுக்கள் பெறப்பட்டன.


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுக்கு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளதால், துறை அலுவலர்களிடம் மனுக்கள் அனுப்பி உடனடி தீர்வு காணும் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.


தருமபுரி மாவட்ட முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம் சார்பில் ஆதரவற்ற பெண்களுக்கு சுயதொழில் உதவியாக ரூ. 16.60 இலட்சம் மதிப்பில் 83 பயனாளிகளுக்கு தலா ரூ. 20,000 வழங்கப்பட்டது. மருத்துவத்துறை சார்பில் உலக காசநோய் தினம் - 2025 முன்னிட்டு, காசநோய் இல்லாத 9 ஊராட்சிகளுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும், போட்டிகளில் வெற்றி பெற்ற 6 கல்லூரி மாணவிகளுக்கும், காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்துப் பெட்டகம் வழங்கப்பட்டன. சிறந்த நண்பர்களாக செயல்பட்ட 2 தன்னார்வ அமைப்புகளுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மூளை முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு ரூ. 7,500 மதிப்பில் கால் தாங்கி வழங்கப்பட்டது. அரசு கேபிள் டிவி நிறுவனம் சார்பில் 2 பயனாளிகளுக்கு Standby Signal Device வழங்கப்பட்டது.


இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ஆர்.கவிதா, இணை இயக்குநர் (மருத்துவம்) மரு.சாந்தி, துணை இயக்குநர் (காசநோய்) மரு.பாலசுப்பிரமணியன், தனித்துணை ஆட்சியர் (சபாதி) திரு.சுப்பிரமணி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் திரு.சையது முகைதீன் இப்ராகிம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திருமதி.செண்பகவள்ளி, தனி வட்டாட்சியர் (கேபிள் டிவி) திரு.ராஜராஜன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad