தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கி.சாந்தி, இஆப., அவர்கள் தலைமையில் இன்று (07.10.2024) நடைபெற்றது. இம்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுகொண்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுக்கு முக்கியத்துவம் அளித்து, விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தியுள்ளார்கள்.
இன்றைய தினம் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் சாலை வசதி, குடிநீர் வசதி, பேருந்து வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் வேண்டியும், பட்டா வேண்டுதல், சிட்டா பெயர் மாற்றம், புதிய குடும்ப அட்டை வேண்டுதல், வாரிசு சான்றிதழ், வேலைவாய்ப்பு, இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் ஓய்வூதியத் தொகை உள்ளிட்ட இதர உதவித் தொகைகள் உட்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகைகள், உபகரணங்கள் வேண்டியும் மொத்தம் 434 மனுக்கள் வரப்பெற்றன.
பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் அனைத்தும், சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி, நடவடிக்கை மேற்கொண்டு தகுதியான மனுக்களுக்கு உரிய தீர்வினை உடனுக்குடன் வழங்கிட வேண்டுமெனவும், பொதுமக்கள் அளிக்கின்ற கோரிக்கை மனுக்கள் மீது துறை அலுவலர்கள் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு அதற்கான தீர்வினை விரைந்து காண வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
இம்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மகளிர் திட்டம் சார்பில் மாவட்ட அளவில் இரத்தசோகை இல்லாத கிராமம் குறித்த சிறப்பு பிரச்சாரம் மேற்கொள்ளுதல், சிறுதானியங்கள் மற்றும் பாரம்பரிய உணவு திருவிழாவில் கலந்துகொள்ளுதல் ஆகிய பணிகளுக்காக பென்னாகரம் வட்டார அளவிலான மகளிர் சுய உதவிக்குழு கூட்டமைப்புக்கு முதல் பரிசாக ரூபாய் 5 ஆயிரம், கடத்தூர் வட்டார அளவிலான மகளிர் சுய உதவிக்குழு கூட்டமைப்புக்கு 2-ஆம் பரிசாக ரூபாய் 4 ஆயிரம், ஏரியூர் வட்டார அளவிலான மகளிர் சுய உதவிக்குழு கூட்டமைப்புக்கு 3-ஆம் பரிசாக ரூபாய் 3 ஆயிரம் பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
மேலும், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு அதிக அளவில் கடன் வழங்கியதில், மாவட்ட அளவில் சிறந்த வங்கியாக தருமபுரி இந்தியன் வங்கியும், மாவட்ட அளவில் கிளை வங்கியில் முதலிடம் பெற்ற இந்தியன் வங்கியின் காரிமங்கலம் கிளைக்கு ரூபாய் 15 ஆயிரம் பரிசுத்தொகை, 2-ஆம் இடம் பெற்ற தமிழ்நாடு கிராம வங்கியின் தருமபுரி கிளைக்கு ரூபாய் 10 ஆயிரம் பரிசுத்தொகை, 3-ஆம் இடம் பெற்ற மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் காரிமங்கலம் கிளைக்கு ரூபாய் 5 ஆயிரம் பரிசுத்தொகை, கேடயங்கள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
இம்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு. செ.பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) திருமதி.லலிதா, மத்திய கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குநர் திருமதி.மலர்விழி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் திரு.ராமஜெயம், தனித்துணை ஆட்சியர் (சபாதி) திரு.சுப்பிரமணியம், பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் திரு.சையது முகைதீன் இப்ராகிம், உதவி மகளிர் திட்ட அலுவலர்கள் திரு.பெருமாள், திருமதி.சந்தோசம் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக