வாக்காளர் பட்டியல் தொடர்திருத்த பணியின் முதல் நடவடிக்கையாக வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள வாக்குச்சாவடி மைய பகுதியில் வசித்துவரும் அனைத்து வாக்காளர்களின் விபரங்களை ஆகஸ்ட் 20 முதல் அக்டோபர் 18 வரை வீடு, வீடாக சென்று சரிபார்ப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளார்கள். களஆய்வின் போது ஒவ்வொரு குடும்பத்தில் உள்ள மொத்த உறுப்பினர்கள் அவர்களில் எவ்வளவு பேர் வாக்காளர்களாக பதிவு செய்துள்ளார்கள் மற்றும் ஒவ்வொரு குடும்பத்திலும் விடுபட்டுள்ள வாக்காளர்களை கண்டறிந்து சேர்த்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த சரிபார்ப்பு பணியானது வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் அனைவரும் தேர்தல் ஆணையத்தால் புதியதாக அறிமுகப்படுத்தியுள்ள செயலி வழியாக (BLO APP) மேற்கொள்ள உள்ளனர்.
வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வாக்காளர்களின் இல்லம் தேடி வரும் போது வாக்காளர்கள் தங்களது பெயர், வயது, புகைப்படம், முகவரி திருத்தம், உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்ள தெரிவிக்கலாம். மேலும் வாக்காளர் பட்டியலில் புதியதாக பெயர் சேர்க்கவும், இறந்து போன அல்லது நிரந்தரமாக புலம் பெயர்ந்த நபர்களை இனம் கண்டு நீக்கம் செய்திடலாம்.
எனவே தருமபுரி மாவட்டத்தில் மேற்கண்ட பணிகளை சிறப்பாகவும், விரைவாகவும், துரிதமாகவும் முடித்திடும் பொருட்டு, பொதுமக்கள் தங்கள் வீட்டிற்கு கணக்கெடுப்பு பணிக்கு வரும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் தங்களது கோரிக்கைகளை தெரிவித்து அவர்களுக்கு தேவையான விவரங்களை அளித்து முழு ஒத்துழைப்பு வழங்கிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது, என தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

.jpeg)