காவிரிக்கரையில் ஒரு கோடி பனை விதைகள் நடும் நெடும் பணியின் தொடக்க விழா தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவிரிக்கரையில் வருகின்ற 08.09.2024 அன்று நடைபெறவதையொட்டி, முன்னேற்பாடு பணிகள் குறித்த துறை அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது.
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில், தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை, கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு, தமிழ்நாடு தன்னார்வலர்கள் அமைப்பு, தமிழ்நாடு பசுமை இயக்கம் இணைந்து ஒருங்கிணைக்கும் காவிரிக்கரையில் ஒரு கோடி பனை விதைகள் நடும் நெடும் பணியின் தொடக்க விழா தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவிரிக்கரையில் வருகின்ற 08.09.2024 அன்று நடைபெறவதையொட்டி, முன்னேற்பாடு பணிகள் குறித்த துறை அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (30.08.2024) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது: தமிழகத்தின் மாநில மரமான, தமிழர்களின் வாழ்வியலோடு நெருங்கிய உறவுடைய, பரமாரிப்பில்லாமலே காலத்துக்கும் பயன் தரும் பனை மரத்தை அழியாமல் பாதுகாக்கவும், இளைஞர்களிடம் பனையின் சிறப்பை கொண்டு செல்லும் விதமாகவும் தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை, கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு, தமிழ்நாடு தன்னார்வலர்கள் அமைப்பு, தமிழ்நாடு பசுமை இயக்கம் இணைந்து ஒருங்கிணைக்கும் காவிரிக்கரையில் ஒரு கோடி பனை விதைகள் நடும் பணி 2024-ஆனது ஒகேனக்கல் முதல் பூம்புகார் வரை வருகின்ற 08.09.2024 அன்று தொடங்கி வைக்கப்பட உள்ளது.
அதனடிப்படையில், செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி தமிழகம் முழுக்க பனை விதைகள் சேகரிப்பும். அவற்றை தொடர்ந்து செப்டம்பர் மாதம் 5 கட்டங்களாக பனை விதைகள் நடும் பணி ஒகேனக்கல் முதல் பூம்புகார் வரை தருமபுரி, ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி தஞ்சாவூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் காவிரிக்கரையின் இருபக்கங்களிலும் 416 கிலோ மீட்டர் தொலைவிற்கு நடக்க இருக்கிறது. இதேபோன்று, தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட நீர்நிலைகளிலும் பனை விதைகளை நடும் நெடும் பணி தொடர இருக்கிறது.
இப்பணியில் 100-க்கும் மேற்பட்ட சுற்றுசூழல் அமைப்புகள் மற்றும் ஒரு இலட்சம் தன்னார்வலர்கள் (மாணவர்கள் / சமூக சேவகர்கள் தொண்டு நிறுவனங்கள் / சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்) பங்கேற்று பனை விதைகளை நடுகின்றனர். இதில், பங்கேற்கும் மாணவ, மாணவியர்கள். சமூக சேவகர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் udhaviapp/panai என்ற இணையதளம் மூலம் பதிவு செய்து கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளபடுவதோடு, பங்கேற்பவர்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, காவிரிக்கரையில் ஒரு கோடி பனை விதைகள் நடும் நெடும் பணியில் தருமபுரி மாவட்ட மாணவ, மாணவியர்கள். சமூக சேவகர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு, நம் மாநில மரமான பனை மரத்தை நட ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மரு.செ.பால் பிரின்ஸ்லி ராஜ்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.சையது முகைதீன் இப்ராகிம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமதி.ஜோதிசந்திரா, கிரீன்நீடா சுற்றுசூழல் அமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு.மு.ராஜவேலு, தமிழ்நாடு தன்னார்வலர் அமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு.என்.ஹரிகிருஷ்ணன், உறுப்பினர் திரு.பசுமைசங்கர், அரசுத்துறை அலுவலர்கள், தன்னார்வ அமைப்புகள் மற்றும் தொண்டுநிறுவனங்கள் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.