கர்நாடகா அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் குறைக்கப்பட்டதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றிலும் நீர்வரத்து குறைந்து காணப்பட்டன. இந்த நிலையில் கர்நாடகா அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீராலும் தமிழக காவிரி கரையோர பகுதிகளில் பெய்த மழையின் காரணமாகவும் தமிழக எல்லை பகுதியான பிலிகுண்டுலுவில் தற்போது நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.
நேற்று வரை 13,000 கன அடியாக இருந்த நீர்வரத்து தற்போது அதிகரித்து வினாடிக்கு 28 ஆயிரம் கன அடியாக நீடித்து வருகிறது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மீண்டும் அதிகரித்துள்ள இந்த நீர் வரத்தால் சுற்றுலாப் பயணிகள் நலன் கருதி பரிசல் இயக்குவதற்கு மாவட்ட நிர்வாகம் மீண்டும் இன்று முதல் நீர்வரத்து குறையும் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அருவி மற்றும் ஆற்றுப்பகுதிகளில் குளிப்பதற்கான தடை 32 வது நாளாக நீடித்து வருகிறது.

