அரிய வகை பூக்களில், பிரம்ம கமலம் பூக்களும் ஒன்றாகும். இதை 'நிஷகாந்தி' என்றும் அழைப்பர். ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே, இரவில் பூக்கும் அபூர்வ மலராகும். வெண்ணிறத்தில் மூன்று இதழ்கள் கொண்டுள்ள இந்த மலர், மிகவும் அழகாக தென்படும். அமெரிக்காவின் மெக்சிகோவை பிறப்பிடமாக கொண்ட பிரம்ம கமலம், பொதுவாக ஜூலை மாதத்தில் பூக்கும். இலங்கையில் இந்த மலரை, 'சொர்க்கத்தின் பூ' என வர்ணிக்கின்றனர்.
புத்தருக்கு அஞ்சலி செலுத்தும் நோக்கில், ஆண்டுக்கு ஒரு முறை, தேவர்கள் பிரம்ம கமலம் பூக்களாக உருவெடுத்து, பூமிக்கு வருவதாக அந்நாட்டு மக்கள் நம்புகின்றனர். ஹிந்து மதத்தில் பிரம்ம கமலம், புனிதமானதாக கருதப்படுகிறது. ஆன்மிக ரீதியிலும் சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. பென்னாகரத்தை சேர்ந்த ஐயப்ப குருசாமி ஒருவரின் வீட்டில் பிரம்ம கமலம் செடி உள்ளது. இவரது வீட்டில் உள்ள பிரம்மகமலம் செடியில் இரண்டு பிரம்மகமலம் பூக்கள் மலர்ந்துள்ளது.
இன்று (21.07.2024) இரவு 9 மணியளவில் இப்பூக்கள் மலர்ந்தன. இதை பார்த்து, அவ்வீட்டினர் பக்தி பரவசம் அடைந்தனர். இந்த பூக்கள் மலரும் போது, என்ன வேண்டினாலும் நடக்கும் என்பது ஐதீகம். எனவே அந்த குடும்பத்தினர், பூக்களுக்கு பூஜை செய்து வழிபட்டனர். தகவலறிந்த சுற்றுப்பகுதி மக்கள், இவரது வீட்டில் மலர்ந்த பிரம்ம கமலத்தை பார்க்க ஆர்வத்துடன் வந்தனர். பக்தியுடன் வணங்கினர்.

