தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள மாங்கரை ஊராட்சிக்கு உட்பட்ட வண்ணாத்திப்பட்டியில், 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த ஊரில் தனியார் பிளாஸ்டிக் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலை ஊரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது.
இந்த பிளாஸ்டிக் தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றப்படும் புகை மற்றும் கழிவு நீர் ஆகியவைகள் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளிலும், விவசாய நிலத்திலும் கலக்கிறது. இந்த தனியார் பிளாஸ்டிக் தொழிற்சாலையால் இப்பகுதி பொதுமக்களுக்கு, மூச்சுத் திணறல், கண் எரிச்சல் போன்றவை ஏற்படுவதாகவும், வாந்தி உள்ளிட்ட ஒவ்வாமை ஏற்படுவதாகவும் புகார் தெரிவிக்கின்றனர்.
இப்பகுதியில் நிலத்தடி நீர் குடிக்க முடியாத அளவிற்கு மாசு ஏற்பட்டு இருப்பதாகவும், உடலில் சரும அரிப்பு ஏற்படுவதாகவும் பொதுமக்கள் புகார் கூறுகின்றனர், மேலும் இந்த பிளாஸ்டிக் கம்பெனியிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரால் நிலத்தடி நீரும் மாசடைந்துள்ளது. பொதுமக்களுக்கு ஏற்படும் இன்னல்கள் குறித்து அந்த பிளாஸ்டிக் தொழிற்சாலை நிர்வாகத்திடம் அந்த ஊரின் முக்கியஸ்தர்கள் பலமுறை முறையிட்டனர், ஆனால் அவர்கள் அலட்சியப் போக்குடன் செயல்படுகின்றனர் எனக்கூறி 20க்கும் மேற்பட்ட பொதுமக்கள், பென்னாகரம் துணை வட்டாட்சியர் ஜெயலட்சுமி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நிர்வாகம் தாரா ஆகியோரிடம் புகார் மனு வழங்கினர்.
இதுகுறித்து அந்தப் பகுதி மக்கள் கூறியதாவது, ஊரின் மையப்பகுதியில் அமைந்துள்ள பிளாஸ்டிக் கம்பெனியால் அதிகப்படியான துர்நாற்றம் வீசுகிறது. மூச்சு விடவே சிரமமாக உள்ளது. மேலும் கண் எரிச்சல் வாந்தி ஆகியவைகள் ஏற்படுகிறது. தண்ணீர் குடிக்கவே முடியவில்லை, தண்ணீரெல்லாம் அசுத்தமாக உள்ளது. தோல் அலர்ஜி ஏற்படுகிறது. குழந்தைகள் மற்றும் முதியவர்கள் மூச்சு விடவே சிரமப்படுகின்றனர்.
தனியார் பிளாஸ்டிக் கம்பெனியில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் மற்றும் புகையால், ஊர் முழுவதும் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கேன்சர் வந்துவிடுமோ என்று பயமாக உள்ளது. எனவே உடனடியாக அந்த பிளாஸ்டிக் கம்பெனியை அப்புறப்படுத்த வேண்டும், நிரந்தரமாக மூட வேண்டும் என புகார் மனு கொடுத்துள்ளோம். அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தவறினால், ஊர் பொதுமக்களை திரட்டி, அடுத்த கட்ட போராட்டத்தில் இறங்குவோம் என தெரிவித்தனர்.