தருமபுரி, நவம்பர் 6:
இந்த நிகழ்ச்சியில் வேலைவாய்ப்பு, தொழில் வாய்ப்பு, உயர் கல்வி, வங்கிக் கடன்கள், சுய தொழில் தொடங்குதல் போன்ற தலைப்புகளில் பல்வேறு கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. மாவட்ட ஆட்சித் தலைவர் அவற்றை பார்வையிட்டு மாணவர்களுக்கு பயனுள்ள ஆலோசனைகளை வழங்கினார்.
தொடர்ந்து, “மாபெரும் தமிழ்க்கனவு” நிகழ்ச்சியின் காணொளி கல்லூரி மாணவ, மாணவியர்களுக்காக ஒளிப்பரப்பப்பட்டது. மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப. அவர்கள் உரையாற்றியபோது,
“மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, தமிழகமெங்கும் 200 கல்லூரிகளில் 300 சொற்பொழிவுகள் மூலம் 2 இலட்சம் மாணவர்கள் பயனடையும் வகையில் ‘மாபெரும் தமிழ்க்கனவு’ நிகழ்ச்சி நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக தருமபுரி மாவட்டத்தில் இன்று இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டு சிறப்பாக நடைபெற்று வருகிறது,” எனத் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:
“தமிழ்நாடு அரசு மாணவர்களின் நலனுக்காக பல முன்னோடி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதேசமயம் தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு போன்றவற்றை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் நோக்கத்துடன் தான் இந்த ‘மாபெரும் தமிழ்க்கனவு’ நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது.
தமிழ் மரபு, கலாச்சாரம், அறிவியல், இலக்கியம் ஆகியவை அனைத்தும் தமிழர்களின் வாழ்வில் நெருக்கமாக பின்னிப் பிணைந்துள்ளன என்பதை இந்த நிகழ்ச்சி உணர்த்துகிறது. மாணவர்கள் இதன் மூலம் பெறும் கருத்துகள், உங்கள் வாழ்க்கையில் வழிகாட்டியாக அமையும்,” என்றும் கூறினார்.
பின்னர் “தமிழ் – அறத்தின் தாய்!” என்ற தலைப்பில் சொற்பொழிவாளர் பாவலர் அறிவுமதி அவர்கள் சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியின் போது மாணவர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதில் அளிக்கப்பட்டதுடன், சிறந்த கேள்விகள் எழுப்பிய மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப. அவர்கள் சான்றிதழ்களும் வழிகாட்டி புத்தகங்களும் வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ஆர். கவிதா, அரசு தருமபுரி மருத்துவக் கல்லூரி முதல்வர் மரு. மனோகர், பல துறை அலுவலர்கள், பேராசிரியர்கள், மற்றும் ஏராளமான மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மாணவர்கள் உற்சாகமாக பங்கேற்று, தமிழின் பெருமை மற்றும் பண்பாட்டின் ஆழத்தை உணர்ந்தனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு: 📞 9843 663 662

.jpg)