தமிழ்நாடு அரசு வனஉயிரினங்களை சட்டத்திற்கு புறம்பான மின் இணைப்பு, மின்சார ஒயர்கள், கம்பி வலைகள் மற்றும் நாட்டு வெடிமருந்து (அவிட்டுகாய்) ஆகியவற்றை கொண்டு வேட்டையாடுவதிலிருந்து பாதுகாக்க மாவட்ட அளவிலான குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் இக்குழுவின் தலைவர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் 04.04.2024 அன்று நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு வனஉயிரினங்களை சட்டத்திற்கு புறம்பான மின் இணைப்பு, மின்சார ஒயர்கள், கம்பி வலைகள் மற்றும் நாட்டு வெடிமருந்து (அவிட்டுகாய்) ஆகியவற்றை கொண்டு வேட்டையாடுவதிலிருந்து பாதுகாக்க ஏதுவாக தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்களது தலைமையில், தருமபுரி மாவட்ட வன அலுவலர் திரு.கா.இராஜாங்கம், இ.வ.ப., அவர்கள் ஒருங்கிணைப்பாளராகவும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஸ்டீபன் ஜேசுபாதம், மாவட்ட வருவாய் அலுவலர், மின்சாரத்துறை செயற்பொறியாளர், வேளாண்துறை இணை இயக்குநர், கனிம வள உதவி இயக்குநர் மற்றும் தருமபுரி மண்டல உதவி வனப்பாதுகாவலர் (வனப்பாதுகாப்புப்படை) ஆகியோர்களை உறுப்பினர்களாகக் கொண்டு குழு அமைக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி இக்குழுவின் முதல் கூட்டம் 04.04.2024 அன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கி.சாந்தி, இ.ஆ.ப., தெரிவித்ததாவது: தமிழ்நாடு அரசு வனஉயிரினங்களை சட்டத்திற்கு புறம்பான மின் இணைப்பு, மின்சார ஒயர்கள், கம்பி வலைகள் மற்றும் நாட்டு வெடிமருந்து (அவிட்டுகாய்) ஆகியவற்றை கொண்டு வேட்டையாடுவதிலிருந்து பாதுகாக்க தேவையான விழிப்புணர்வு பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடையே ஏற்படுத்துமாறு குழு உறுப்பினர்களிடம் தெரிவித்தார். மேற்படி குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்டறியப்பட்டால் இந்திய வனஉயிரின பாதுகாப்புச்சட்டம் 1972இன் கீழ் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும், வன உயிரினங்களை வேட்டையாடவும், வாய்வெடி தயாரிக்க (அவிட்டுகாய்) வெடி மருந்துகளை வழங்கும் கடை / நிறுவனம் கண்டறியப்பட்டால் அவர்களின் உரிமம் இரத்து செய்யப்படும் எனவும், இக்குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை கண்டறிய வனத்துறை, வருவாய்துறை மற்றும் காவல் துறை அடங்கிய தனிக்குழுக்கள் அமைத்து கூட்டு களத்தணிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.
வனஉயிரினங்களை பாதுகாப்பது தொடர்பாக மின்சாரத்துறையுடன் இணைந்து வனப்பகுதிகளை ஒட்டியுள்ள விளை நிலங்களில் சட்ட விரோதமாக மின் இணைப்பு வைத்துள்ள நபர்களை கண்டறிய கூட்டு களத்தணிக்கை மேற்கொண்டு வருவதாகவும், வனத்தை ஒட்டியுள்ள கிராமங்களில் சட்டத்திற்கு புறம்பாகவும், பயிர் சேதங்களை தடுக்கவும், வனஉயிரினங்களை வேட்டையாடுவதற்காகவும் கண்ணி வலைகள், நாட்டு வெடிகுண்டுகள், மின்சார வேலி அமைத்தல் போன்ற ஒழுங்கீனங்கள் தென்படுகின்றதா என்பது குறித்து களத்தணிக்கை மேற்கொள்ள வனச்சரககுழு அமைக்கப்பட்டு தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், இது தொடர்பான சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் கண்டறியப்பட்டால் இந்திய வன உயிரின பாதுகாப்புச்சட்டம் 1972இன் கீழ் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு குறைந்தபட்சமாக 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கவும் அல்லது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யவும் சட்டத்தில் வழிவகை உள்ளது. இது போன்ற சட்டவிரோத செயல்களில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் யாரும் ஈடுபட வேண்டாம் எனவும், குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் சமூக விரோத சக்திகளின் விவரம் அறிந்தால், தருமபுரி வனத்துறை இலவச தொலைபேசி எண் 1800 425 4586 வாயிலாக வனத்துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கலாம். அவ்வாறு தகவல் அளிப்பவர்களின் விவரங்கள் இரகசியமாக பாதுகாக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஸ்டீபன் ஜேசுபாதம், தருமபுரி மாவட்ட வன அலுவலர் திரு.கா.இராஜாங்கம், இ.வ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் திரு.பால்பிரின்ஸ்லி ராஜ்குமார் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

.jpg)