தற்போது LLR (வாகனங்கள் ஓட்டுவதற்கான பழகுநர் உரிமம்) பெற ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகளையும், இடைத்தரகர்களையும், தனியார் Browsing Centre - களையும் பொதுமக்கள் அனுகவேண்டிய நிலை உள்ளது. இதில் தேவையற்ற செலவு பொதுமக்களுக்கு ஏற்படுகிறது. மேலும் இந்த முறையில் வெளிப்படைத் தன்மையும் இல்லாமல் உள்ளது. மேலும் இந்த சேவைகளைப் பெறுவதற்கு பொதுமக்கள் அருகாமையில் உள்ள நகரங்களுக்கு வரவேண்டிய நிலை உள்ளது.
இதனைத் தவிர்ப்பதற்காகவும், இது குறித்து எந்த வித புகார்களுக்கும் இடமளிக்காத வகையில் இதனை மேம்படுத்துவதற்கும், நடைமுறையில் உள்ள சிக்கல்களைக் களைவதற்கும், பொதுமக்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகாமையிலேயே இந்த சேவையை கொண்டு சேர்ப்பதற்கும், தமிழ்நாடு அரசு முடிவு செய்து உள்ளது.
அதனடிப்படையில் மாண்புமிகு தமிழ்நாடு முதல் அமைச்சரின் ஆணைப்படியும், மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படியும் இனி மாநிலம் முழுவதிலுமுள்ள 55,000 - க்கும் அதிகமான இ-சேவை மையங்கள் மூலம் இந்த LLR (வாகனங்கள் ஓட்டுவதற்கான பழகுநர் உரிமம்) பெற விண்ணப்பிக்கும் முறை இன்று முதல் (13.03.2024) நடைமுறைக்கு வருகிறது.
இந்த வசதியை பொதுமக்கள் பயன்படுத்திக் கொண்டு தங்களுக்கு அருகாமையிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாகவும் இனி LLR ( வாகனங்கள் ஓட்டுவதற்கான பழகுநர் உரிமம் ) பெற விண்ணப்பித்துக் கொள்ளலாம். இ-சேவை மையங்கள் மூலம் இந்த சேவையினைப் பெறுவதற்கு பொதுமக்கள் கூடுதலாக இ-சேவை மையத்திற்கான சேவைக் கட்டணமாக ரூ.60 –ஐச் செலுத்த வேண்டும். ஒப்புதல் அளிக்கப்பட்ட LLR –ஐ வழக்கம் போல விண்ணப்பதாரர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
தொடர்ந்து மோட்டார் வாகனத் துறை மூலம் பொதுமக்கள் பெறக்கூடிய இதர சேவைகளையும் ( Driving License, Permit, உரிமை மாற்றம் உள்ளிட்ட) இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். என வட்டார போக்குவரத்து அதிகாரி / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்துள்ளார்.