பாராளுமன்ற பொதுத் தேர்தல் -2024ஐ முன்னிட்டு, பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறை மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர வைப்பறையினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் இன்று (20.03.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்ததாவது: தமிழ்நாட்டில் பாராளுமன்ற பொதுத் தேர்தல் முதல் மற்றும் ஒரே கட்டமாக ஏப்ரல் மாதம் 19-ஆம் தேதி நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை ஜூன் மாதம் 4-ஆம் தேதி நடைபெற உள்ளது. தருமபுரி பாராளுமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து இன்று பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுகளையும், பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 183 வாக்குச்சாவடி மையங்களில் அடங்கியுள்ள 272 வாக்குச்சாவடிகளிலும் தேர்தல் நடைபெறும் நாளன்று வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாகவும், அடிப்படை வசதிகளான குடிநீர், மின்சார வசதி, கழிப்பறை வசதி, மாற்றுதிறனாளிகள் மற்றும் வயதானவர்கள் வாக்களிக்க சாய்வுதளம், 85 வயது கடந்தவர்கள், மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தபடியே வாக்களிக்க ஏதுவாக 12-D படிவங்கள் வழங்கும் பணி போன்றவைகள் குறித்தும், பறக்கும் படை குழுக்கள், நிலையான கண்காணிப்பு குழுக்களின் செயல்பாடுகள் குறித்தும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கும் வைப்பறையின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் இன்று ஆய்வு செய்யப்பட்டது.
உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களுக்கும், பணியாளர்களுக்கும் வாக்குப்பதிவு மற்றும் வாக்குப்பதிவு இயந்திரங்களை எவ்வாறு கையாள்வது குறித்து உரிய பயிற்சியை வழங்க வேண்டும். இப்பயிற்சியின் மூலம் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் எவ்வித சந்தேகங்கள் இன்றி முழுமையாக அறிந்துகொள்ள வேண்டும். வாக்குச்சாவடி மையங்கள் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறையில் பொருத்தப்படும் CCTV கேமராக்கள் உரிய பாதுகாப்போடு பொருத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
இதனைதொடர்ந்து, தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், வெள்ளிசந்தை கூட்ரோட்டில் பறக்கும் படையினர் வாகனங்கள் சோதனை செய்து வரும் பணிகளையும், கரகதஅள்ளி கூட்ரோட்டில் நிலையான கண்காணிப்பு குழுவினரின் ஆய்வு பணி மேற்கொண்டு வருவதையும் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் பார்வையிட்டார். இந்நிகழ்வுகளின் போது, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் திருமதி.தனப்பிரியா, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் - பொறுப்பு அலுவலர் திருமதி.தேன்மொழி, பாலக்கோடு வட்டாட்சியர் திரு.ஆறுமுகம் ஆகியோர் உடனிருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக