இதுகுறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்துள்ளதாவது: தருமபுரி மாவட்டம், 10- தருமபுரி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பாலக்கோடு சட்டமன்ற தொகுதி, பென்னாகரம் சட்டமன்ற தொகுதி, தருமபுரி சட்டமன்ற தொகுதி, பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி, அரூர் (தனி) சட்டமன்ற தொகுதி, மேட்டூர் சட்டமன்ற தொகுதி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளின் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களால் திருமண மண்டபங்கள், நகை அடகு கடைகள், பத்திரிக்கை அச்சகங்கள் போன்றவற்றின் உரிமையாளர்களுக்கு ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டு, தேர்தல் தொடர்பான நடத்தை விதிகள், விதிமுறைகள் நடைமுறைக்கு வரப்பெற்றது தொடர்பாகவும், பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்தும் உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டது.
மேலும், இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட பொருட்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
திருமண மண்டபங்கள்:
- மண்டபங்களில் ஆலோசனை கூட்டம் நடத்த முறையாக தேர்தல் பிரிவில் அனுமதி பெற வேண்டும். அரசியல் கட்சி நிர்வாக கூட்டங்கள் அனுமதித்தல் கூடாது
- கட்சி சார்ந்த கூட்டம் நடத்த அனுமதி பெற வேண்டும்
- காது குத்து போன்ற நிகழ்ச்சிகளில் அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டால் அனுமதி பெற வேண்டும்.
- நிகழ்ச்சி நடைபெறும் போது மண்டபத்தின் அருகே கட்சிக்கொடிகள் பயன்படுத்த அனுமதி இல்லை.
- முறையற்ற பணபரிவர்த்தனைக்கு இடமளிக்கக் கூடாது.
அச்சகங்கள் (Printing Press):
- தவறான வாசகங்கள் பிரகியோகிக்க கூடாது
- பிரதிகளின் எண்ணிக்கை நோட்டீஸில் இருக்க வேண்டும்.
- பிரிண்டிங் பிரஸ் பெயர் நோட்டீஸில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
நகை அடகு கடைகள்:
- முறையற்ற பணப்பரிமாற்றம் அனைத்தும் கண்காணிக்கப்படும்
- நகை அடகுவைப்பது தொடர்பாக முறையான இரசீதினை வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும்.
- இருப்பு வைத்திருக்கும் பணத்திற்கு முறையான கணக்கு வைத்திருக்க வேண்டும்.
- அரசியல் கட்சிகளின் தொடர்பு இன்றி நடத்தப்பட வேண்டும்.
மண்டப உரிமையாளர்கள், அச்சக உரிமையாளர்கள், நகை அடகு கடை உரிமையாளர்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கு உரிய பதில்களும், அறிவுரைகளும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, திருமண மண்டபம் உரிமையாளர்கள், நகை கடை உரிமையாளர்கள் மற்றும் அச்சக உரிமையாளர்கள் தேர்தல் நடத்தை விதிகளை முழுமையாக பின்பற்றிட வேண்டும்.
மீறினால் சட்டப்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக