தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே ஜக்கசமுத்திரம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீதேவகிரி முனியப்பன் சுவாமி கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைப்பெற்றது.
நேற்று முன்தினம் கணபதி பூஜை உடன் கொடியேற்றம் செய்யபட்டு விழா தொடங்கப்பட்டது. முக்கிய நாளான நேற்று அதிகாலை முதலே பல்வேறு திரவியங்களால் சுவாமிக்கு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, மங்கள இசை, கோபூஜை, இரண்டாம் கால யாக பூஜை, நாடி சந்தானம், பஞ்சசூக்த பாராயணம், திரவிய மகாஹோமம் மஹா பூர்ணாஹதி, ஹோமங்கள் செய்யப்பட்டது.
ஊர்கவுண்டர், ஓபுளி கவுண்டர். மந்திரி கவுண்டர், மற்றும் சிவாச்சாரியர்கள் தலை மீது தீர்த்தகுடம் எடுத்து சென்று முனியப்ப சுவாமிக்கு மகா கும்பாபிஷேகம் செய்து பக்தர்கள் மீது புனித நீர் தெளித்தனர்.
பக்தர்கள் ஆடு, கோழி, கிடா பலியிட்டு முப்பூசை செய்தும், பெண்கள் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் மாவிளக்கு தட்டு, பால்குடம் எடுத்தும் தங்களின் வேன்டுதலை நிறைவேற்றினர். அதனை தொடர்ந்து பல்வேறு பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு சுவாமிக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இத்திருவிழாவில் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர், பக்தர்கள் அனைவருக்கும் அன்னாதனம் வழங்கப்பட்டது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.