பல்வேறு கட்டங்களாக 22 மாநிலம் மற்றும் மூன்று யூனியன் பிரதேசங்களில் 1260 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் e-NAM திட்டத்தின் படி மின்னணு வர்த்தகத்தில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த விளைபொருட்களை தேசிய அளவில் சந்தைப்படுத்தி அதிக விலைக்கு விற்பனை செய்து வருவாயினைப் பெருக்கிடவும், நாடெங்கிலும் உள்ள வணிகர்கள் தங்களுக்கு கட்டுபடியாகக் கூடிய விலையில் தேவைப்படும் தரமான விளைபொருளை தேர்வு செய்து வாங்கும் வகையிலும் e-NAM எனும் மின்னணு வர்த்தக பரிவர்த்தனை முறையை இந்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசு இணைந்து செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டம் தமிழ்நாட்டில் 157 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் ஏழு ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் அரூர், தருமபுரி மற்றும் பாலக்கோடு ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் இத்திட்டத்தில் இணைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.
அரூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நடப்பு ஆண்டில் 5550 குவின்டால் பருத்தி, மஞ்சள் மற்றும் நெல் ஆகியவை ரூ.338.96 இலட்சம் மதிப்பில் மின்னணு முறையில் வர்த்தகம் மேற்கொண்டு 2328 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.
பாலக்கோடு ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் 10263 குவின்டால் தக்காளி ரூ.226.37 இலட்சம் மதிப்பில் தமிழ்நாட்டிலேயே அதிக அளவில் பண்ணை நிலையில் வர்த்தகம் (Farm Gate) மேற்கொண்டு 3555 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.
தருமபுரி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் முதல் முறையாக 743.92 குவின்டால் மஞ்சள் ரூ.41.3 இலட்சம் மதிப்பில் வர்த்தகம் மேற்கொண்டு 253 விவசாயிகள் பயனடைந்துள்ளனர். விரைவில் பென்னாகரம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் e-NAM திட்டத்தில் இணைக்கப்பட உள்ளது. தற்போது பென்னாகரம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் 400.19 குவின்டால் எள்ளு மற்றும் பருத்தி ரூ.29.78 இலட்சம் மதிப்பில் பரிவர்த்தனை மேற்கொண்டு 209 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.
மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டத்தின் படி (e-NAM ) அரூர், தருமபுரி மற்றும் பாலக்கோடு ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் e-NAM எனும் மின்னணு வர்த்தகத் திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ளதால் மாநில மற்றும் தேசிய அளவில் அதிக எண்ணிக்கையிலான வணிகர்கள் ஏலத்தில் பங்கு பெற வாய்ப்பாக அமைந்துள்ளது. எனவே விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் அனைவரும் அரூர், தருமபுரி மற்றும் பாலக்கோடு ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களுக்கு வந்து e-NAM திட்டத்தின் மூலம் விவசாயிகள் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது, என மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக