தருமபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு, பென்னாகரம், தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் ஆகிய ஐந்து சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் கி சாந்தி இன்று வெளியிட்டார். இதன்படி தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஐந்து சட்டமன்றத் தொகுதிகளிலும் 1485 பாகங்களும், 1485 வாக்கு சாவடி நிலையங்களும், மொத்தம் 878 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளது.
மேலும் வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியிடப்பட்ட நாளிலிருந்து ஏழு நாட்களுக்குள் இது தொடர்பான ஆட்சேபனைகள், எதிர்ப்புகள் ஏதேனும் இருப்பின் சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர் அல்லது உதவி வாக்காளர் பதிவு அலுவலகங்களில் தங்களது கோரிக்கையை விண்ணப்பம் வாயிலாக அளிக்கலாம் எனவும் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.
வாக்காளர்கள் எளிதாக வந்து வாக்களிக்கும் சூழலை ஏற்படுத்தும் வகையில் இரண்டு கிலோ மீட்டருக்கு மேல் பயணிக்க வேண்டிய வாக்காளர்களை அவர்களுக்கு அருகிலேயே வாக்குச் சாவடி அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். ஒரு வாக்கு சாவடியில் மொத்தம் 1500 க்கும் மிகுதியாக வாக்காளர்களின் எண்ணிக்கை இருந்தால் புதிய வாக்குச்சாவடி அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
சட்டமன்ற வாரியாக வரப்பெறும் கோரிக்கைகள் தொகுக்கப்பட்டு இறுதியாக வாக்கு சாவடிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் கலந்து ஆலோசிக்கப்பட்டு, பின்னர் மாற்றங்கள் இறுதி செய்யப்பட்டு தலைமை தேர்தல் அலுவலருக்கு அனுப்பப்படும் என்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி தெரிவித்தார்.
.gif)

