தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம், தளவாய்அள்ளி, இலளிகம் மற்றும் நார்த்தம்பட்டி ஆகிய 3 ஊராட்சிகளுக்கு ரூ.64.80 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஊராட்சி மன்ற அலுவலக கட்டடங்களை மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் முன்னிலையில் இன்று (30.08.2023) திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றி வைத்தார்கள்.
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம், தளவாய்அள்ளி ஊராட்சியில் தேசிய கிராம சுயாட்சித் திட்டத்தின் கீழ் ரூ.23.56 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டடத்தினை மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் திறந்து வைத்தார்கள்.
இதனை தொடர்ந்து, நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம், இலளிகம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், ரூ.17.64 இலட்சம் மதிப்பீட்டிலும், நார்த்தாம்பட்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், ரூ.23.57 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டடங்களை மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் திறந்து வைத்தார்கள்.
பின்னர் மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் பேசும்போது தெரிவித்ததாவது: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க, இன்றைய தினம் தளவாய்அள்ளி, இலளிகம், நார்த்தாம்பட்டி ஆகிய 3 ஊராட்சிகளில் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டடங்களை திறந்து வைப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தருமபுரி மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக என்னை நியமித்து, பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் முறையாக பொதுமக்களுக்கு சென்று சேர்வதை உறுதி படுத்திடும் பணியை வழங்கியுள்ளார்கள். இதற்கிணங்க, தருமபுரி மாவட்டத்திற்கு தொடர்ச்சியாக வருகை புரிந்து, பல்வேறு அரசு திட்டங்களை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தும், நலத்திட்ட உதவிகளை வழங்கியும் வருகின்றோம்.
மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் மக்கள் பணிகளை முறையாக மேற்கொண்டால் மட்டுமே தொடர்ச்சியாக மக்கள் அங்கீகாரத்தினை பெற முடியும். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மகளிருக்கென கட்டணமில்லா பேருந்து பயண திட்டத்தினை அறிவித்து, செயல்படுத்தியுள்ளார்கள். இத்திட்டத்தின் மூலம் பல்வேறு பணிகளுக்கு நகர பேருந்துகளில் பயணம் மேற்கொள்ளும் மகளிரின் பேருந்து பயணச்செலவு குறைந்து, மாதாந்திர சேமிப்பாக சேமிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மகளிர் உரிமைத்தொகை திட்டம் என்ற சிறப்பானதொரு திட்டத்தினை அறிவித்து, சிறப்பானதொரு நிகழ்ச்சியாக விண்ணப்ப பதிவு முகாமினை தருமபுரி மாவட்டம், தொப்பூரில் தொடங்கி வைத்தார்கள். தற்பொழுது விண்ணப்பத்தாரர்களிடம் விண்ணப்பத்தின் உண்மைத்தன்மை குறித்து அலுவலர்கள் முறையான ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளான வருகின்ற செப்டம்பர் 15 அன்று மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் பயனாளிகளுக்கு ரூ.1000/- உரிமைத்தொகை வழங்கி தொடங்கி வைக்க உள்ளார்கள்.
பொதுமக்களின் நலனுக்கென மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களையும் பொதுமக்களாகிய நீங்கள் முறையாக அறிந்து பயன்பெற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் தெரிவித்தார்கள்.
இந்நிகழ்ச்சிகளில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.தடங்கம்.பெ.சுப்பிரமணி, முன்னாள் அமைச்சர் திரு.பி.பழனியப்பன், நல்லம்பள்ளி வருவாய் வட்டாட்சியர் திரு.ஆறுமுகம், நல்லம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.ஆர்.ஆறுமுகம், திரு.ச.லோகநாதன், ஊராட்சி மன்றத் தலைவர்கள் திருமதி.தனலட்சுமி சரவணன் (தளவாய்அள்ளி), திருமதி.பரிமளா மாதேஸ்குமார் (இலளிகம்), திரு.என்.எஸ்.கலைச்செல்வன் (நார்த்தம்பட்டி), கைம்பெண் நலவாரிய உறுப்பினர் திருமதி.ரேணுகா தேவி உட்பட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.