![]() |
கோப்பு படம். |
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் விவசாயிகளின் பொருளாதார மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து அதனைச் சிறப்பாகச் செயல்படுத்தி வருகின்றார்கள். வேளாண் உற்பத்திக்கு முக்கியத்துவம் கொடுத்து அரசு அறிவித்து செயல்படுத்தி வருகின்ற அனைத்துத் திட்டங்களையும் வேளாண் பெருமக்களுக்கு முழுமையாக கொண்டு சேர்த்திட மாவட்ட நிர்வாகத்தால் பல்வேறு நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
தருமபுரி மாவட்டத்தில் ஜனவரி முதல் ஜூலை-2023 திங்கள் வரையிலான காலத்திற்கான இயல்பான மழையளவு 277.2 மி.மீ ஆகும். தற்பொழுது வரை இந்த ஆண்டு 330.09 மி.மீ மழை பெய்துள்ளது. தருமபுரி மாவட்டத்தில் வேளாண்மை உழவர் நலத் துறையில் 2023-2024 ஆம் ஆண்டிற்கு 1,72,270 ஹெக்டேர் பரப்பளவில் நெல், சிறுதானியங்கள், பயிறு வகைகள் உள்ளிட்ட உணவு தானிய பயிர்கள் மற்றும் எண்ணெய் வித்துக்கள், பருத்தி, கரும்பு சாகுபடி பரப்பாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
2023-2024 ஆம் ஆண்டிற்கு நெல் வகைகளான ஆடுதுறை 39, வெள்ளைப்பொன்னி, ADT-53, CO-51, TKM-13, Samba Sub-1, VGD-1, IR-20, CO-50 ஆகியவை 97.86 மெ.டன் இருப்பும், சிறுதானியங்களான ராகி, சோளம், சாமை, கம்பு, இதரதானியங்கள் 39.33 மெ.டன் இருப்பும், பயறு வகைகளான துவரை, உளுந்து, பச்சைபயறு, காராமணி, கொள்ளு, கொண்டகடலை ஆகியவை 112.35 மெ.டன் இருப்பும், எண்ணெய்வித்துக்கள் நிலக்கடலை, எள், சூரியகாந்தி, ஆமணக்கு உள்ளிட்டவைகள் 13.51 மெ.டன் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
வேளாண் பயிர்களின் உற்பத்தியை பெருக்கும் பொருட்டு இந்த 2023-2024 ஆம் ஆண்டிற்கு 752.6 மெட்ரிக் டன் நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் மற்றும் பருத்தி சான்று விதைகள் உள்ளிட்டவை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஜூலை-2023 திங்கள் வரை 128.47 மெட்ரிக் டன் நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள் எண்ணெய் வித்துக்கள், மற்றும் பருத்தி சான்று விதைகள் உள்ளிட்டவை விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள், மற்றும் பருத்தி உள்ளிட்ட விதைகள் அனைத்து வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் தேவையான விதைகளை பெற்று பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், தருமபுரி மாவட்டத்தில் பட்டு வளர்ச்சித்துறையின் மூலம் 721 ஏக்கர் மல்பரி சாகுபடி இலக்காக நிர்ணயிக்கப்பட்டு 400.50 ஏக்கர் மல்பரி பயிரிடப்பட்டது.
தருமபுரி மாவட்டத்திற்கு வருடாந்திர உரத்தேவை 62484 மெட்ரிக் டன் என கணக்கிடப்பட்டுள்ளது. 15,904 மெட்ரிக் டன் யூரியா, டிஏபி, பொட்டாஷ், காம்ப்ளக்ஸ், எஸ்.எஸ்.பி உள்ளிட்ட உரங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. மேலும் இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் பொருட்டு அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா, ரைசோபியம் போன்ற உயிர் உரங்கள் 2023-2024 ஆம் ஆண்டிற்கு 30,000 எண்ணிக்கைகள் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், ஜூலை-2023 திங்கள் வரை 1556 எண்ணிக்கையிலான உயிர் உரங்கள் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு உள்ளன. 23,394 எண்ணிக்கையிலான உயிர் உரங்கள் இருப்பில் உள்ளன.
உயிர் உரங்கள் தேவையான அளவு இருப்பு உள்ளன. விவசாயிகள் தங்களுக்கு தேவையானவற்றை பெற்று பயன்படுத்திக்கொள்ளலாம். தருமபுரி மாவட்டத்தில் கடந்த ஏப்ரல்-2023 திங்களில் நெல், எண்ணெய் வித்துக்கள், கரும்பு, மரவள்ளி, மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு வகையான பயிர்கள் பயிரிட்ட 9117 விவசாயிகளுக்கு ரூ.79.12 கோடி பயிர்கடன் உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் தருமபுரி மாவட்ட பல்வேறு துறை அலுவலர்களுடன் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், இக்கூட்டத்தில் தமிழ்நாடு மின்சார வாரியம், மீன்வளத்துறை, கால்நடை பாரமரிப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த கோரிக்கைகள் குறித்து விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள தொடர்புடைய துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், வேளாண்மைத் துறை சார்ந்த அனைத்து திட்டங்களையும் விவசாயிகளுக்கு சரிவர எடுத்துச் சென்று அவர்களின் உற்பத்தியையும், வருமானத்தையும் அதிகரிக்கும் வகையில் வேளாண்மைத் துறையின் அனைத்து நிலை அலுவலர்களும் விவசாயிகளுக்கு வேளாண் சார்ந்த அனைத்து நலத்திட்ட உதவிகளும் கிடைக்கப்பெறுவதை அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர்/ அரூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குநர் திருமதி.பிரியா, வேளாண்மை இணை இயக்குநர் திருமதி.க.விஜயா, கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் மரு.சாமிநாதன், வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் திரு.மாது, தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் திருமதி.சக்தி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) திரு.நசீர் இக்பால் உட்பட தொடர்புடைய அலுவலர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக