இந்நிகழ்வில் தர்மபுரி மாவட்டத்தின் கோட்ட வன அலுவலர் எம்.சக்திவேல் அவர்களும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தர்மபுரி மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் திருமிகு. நித்திய லட்சுமி அவர்களும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இன்றைய கால சூழலில் நம் வாழ்க்கை முறையில் ஏற்படுத்திக் கொள்ளக்கூடிய சிறு சிறு மாற்றங்கள் எவ்வாறு சுற்றுச்சூழலில் மிகப்பெரும் நேர்மறையான மாற்றங்களை உண்டாக்கும் என்பதை எடுத்துரைத்தனர்.
தொடர்ந்து சேலம், பெரியார் பல்கலைக்கழக பொருளாதாரத்துறை பேராசிரியை முனைவர். ஜனகம் அவர்கள் 'சுற்றுச்சூழலும் நிலைத்த மற்றும் நீடித்த மேம்பாடும்' என்ற தலைப்பில் உரையாற்றும் பொழுது பருவ கால சூழலுக்கு ஏற்றால் போல நாம் எவ்வாறு இயற்கையோடு இணைந்து பயணிக்க வேண்டும் என்பதையும் மின்னணு சாதன கழிவுகள் மற்றும் ஏனைய பிற கழிவுகளை எவ்வாறு மறுசுழற்சியின் மூலம் பயன்படுத்தி நம்மையும் நம் வாழும் பூமியையும் பாதுகாக்கலாம் என்பதைப் பற்றியும் தெளிவாக எடுத்துரைத்தார்.


தொடர்ந்து உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட ஓவியப்போட்டி கட்டுரை போட்டி மற்றும் பேச்சுப்போட்டி ஆகியவற்றில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணாக்கர்களுக்கு பரிசுகளும் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. தொடர்ந்து சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத துணிப்பை பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக துணிப்பையும் மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கையேட்டையும் சிறப்பு விருந்தினர்கள் மாணாக்கர்களிடையே அறிமுகம் செய்து வைத்து விநியோகித்தனர்.
முன்னதாக பெரியார் பல்கலைக்கழக ஆராய்ச்சி மைய இயக்குனர் (பொ) முனைவர். மோகனசுந்தரம் தலைமை உரை ஆற்ற, மத்திய மக்கள் தொடர்பகத்தின் கள விளம்பர அலுவலர் திரு பிபின் எஸ். நாத் அவர்கள் துவக்கவுரையாற்றினார். முன்னதாக கள விளம்பர உதவியாளர் மூ. தியாகராஜன் அவர்கள் நிகழ்வுக்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்று பேசினார். இறுதியாக இந்நிகழ்வு ஒருங்கிணைப்பாளரும் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலருமான பேராசிரியர். முனைவர். சி. கோவிந்தராஜ் அவர்கள் நன்றி உரையாற்றினார்.
இந்நிகழ்வுக்கான ஏற்பாடுகளை முனைவர் காமராஜ், முனைவர் சஞ்சய் காந்தி மற்றும் பெருமாள், ஹரி கிருஷ்ணன், தாமரைச்செல்வன் ஆகியோர் செய்திருந்தனர்.