அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று தனது 69வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
சேலம் மாவட்டம் சிலுவம்பாளையம் கிராமத்தில் 1954 ஆம் ஆண்டு பிறந்த எடப்பாடி பழனிசாமி, தனது 17வது வயதில் எம்ஜிஆர் மீது கொண்ட அன்பால் அதிமுகவில் இணைந்தார். 1973ஆம் ஆண்டு சிலுவம்பாளையம் கிளைச் செயலாளர் பதவியைப் பெற்றார். எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு 1989 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதா அணி சார்பாக எடப்பாடி தொகுதியில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனார்.
அரசியலில் படிப்படியாக உயர்ந்து ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு முதல் முறையாக கடந்த 2017ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் முதல்வராக பதவியேற்றார் எடப்பாடி பழனிசாமி. அதிமுகவில் ஏற்பட்ட ஒற்றை தலைமை மோதலையடுத்து பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். சிலுவம்பாளையும் எனும் சிறிய கிராமத்தில் கிளைச் செயலாளராக அரசியலைத் தொடங்கிய எடப்பாடி பழனிசாமி தற்போது அதிமுக என்னும் மாபெரும் இயக்கத்தின் பொதுச்செயலாளராக செயல்பட்டு வருகிறார்.

தேர்தல் ஆணையமும் எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் பொதுச்செயலாளாரக அங்கீகரித்துள்ளது. இதனையடுத்து எடப்பாடி பழனிசாமியின் பிறந்தநாளை பல்வேறு இடங்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கியும், அன்னதானம் வழங்கியும், அதிமுகவினர் கொண்டாடினர்.
தர்மபுரி பழைய பஸ் நிலையத்தில் நகர அதிமுக செயலாளர் பூக்கடை ரவி தலைமையில் எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்தநாள் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நகர மன்ற உறுப்பினர்கள் ராஜாத்தி ரவி, உமையாம்பிகை நாகேந்திரன், செந்தில்வேல், நாகராஜ் மற்றும் நகர இணை செயலாளர் சுரேஷ் உள்ளிட்ட கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.
.gif)


