பின்னர் பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டப்பேரவைக் கட்சித் தலைவர் மணி பேசுகையில் பேரவைத் தலைவராக இருப்பவர் வழக்கம் போலவே முட்டுக்கட்டைகளைப் போட்டார். பாட்டாளி மக்கள் கட்சி எழுப்பும் சிக்கல்கல் குறித்து விவாதிக்கவும், விடையளிக்கவும் முதலமைச்சரும் அவை முன்னவரும் அணியமாக இருந்தாலும் அவர்களை அனுமதிக்க அவர் அணியமாக இல்லை. அவரும் அவைக்குறிப்பைக் காரணம் காட்டி அச்சுறுத்தல்களை விடுத்தார்.
ஆனால், அவற்றைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் பொங்கி எழுந்து விட்டார் மணி. ‘உடனே அவைக் குறிப்பில் ஏறினால் என்ன?ஏறாட்டி என்ன? அதைப்பற்றி கவலை இல்லை. எனக்கு 10.5% இட ஒதுக்கீடு வேண்டும். உத்திரவிட்டால் 10 நாட்களுக்குள் நீதிமன்றத்திற்கு தேவையான தரவுகளை, புள்ளிவிவரங்களை வாங்கிவிடலாம். TNPSCக்கு, TRBக்கு, MRBக்கு மற்றவற்றிற்கு எல்லாம் உத்திரவிடுங்கள். எப்படியானாலும் ஒரு மாத காலத்திற்குள் நிறைவேற்ற வேண்டும் என்று மணி கொந்தளித்தார்.

அதனால் வேறு வழியின்றி சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு அனுமதி வழங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது அவைத்தலைவருக்கு வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு குறித்து பரிந்துரைக்க 3 மாத காலக்கெடுவை கொடுத்து எதுவும் செய்யாமல் காலம் கடந்த நிலையில் மேலும் 6 மாத காலம் நீட்டிருப்பது தேவையற்றது. ஏன் 6 மாத காலம் நீட்டிக்க வேண்டும். முதலில் 3 மாதம் காலம் கொடுத்து விட்டு மேலும் 6 மாத காலம் நீட்டிக்கலாமா? அப்படியே எடுத்துக்கொண்டால் கூட ஒரு மாத காலம் நீட்டிருத்திருக்கலாம்.
எங்கள் மருத்துவர் அய்யா அவர்கள் எங்கள் மக்கள் மிகுந்த அதிர்ச்சியில் உள்ளார்கள். காலம் தாழ்த்தாதீர்கள். ஒரு மாத காலத்திற்குள் நிறைவேற்றுங்கள் வன்னியர்கள் சமூக,பொருளாதாரம், கல்வி, வேலை வாய்ப்பில், மிக மிக பின்தங்கிய நிலை. தமிழ்நாட்டின் அதிக மக்கள் தொகை கொண்ட சமுதாயம் .சிறு குறு விவசாயிகளாக, விவசாய தொழிலாளர்களாக, கூலி தொழிலாளர்களாக, வாழும் நிலை உள்ளது. அதிகமாக குடிசைகளில் வாழக்கூடியவர்கள், ஆடு, மாடு மேய்த்து வாழக் கூடியவர்கள், தனிநபர் வருமானத்தில் மிக குறைந்த வருமானம் உள்ளவர்கள்.
ஒவ்வொரு ஆண்டும் 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு தேர்ச்சியில் கடைசியில் இருக்கிற 20 மாவட்டங்களில் வன்னியர்கள். மேற்படிப்பிற்கு செல்ல முடியாத நிலை. RDO, சப் கலெக்டர் பதவிகளில் 2020 ஆம் ஆண்டு தேர்வில் ஒரு வன்னியர் கூட தேர்வு பெறவில்லை. குரூப்-1 பதிவுகளில் மொத்தமே இரண்டு விழுக்காடு மட்டுமே உள்ளனர். குரூப்-2 பதிவுகளில் மொத்தம் மூன்று விழுக்காடு மட்டுமே. இதுவா சமூக நீதி? இது சமூக அநீதி இல்லையா?” என்று முதலமைச்சர் தொடங்கி முன்வரிசையில் இருந்த அமைச்சர்களிடம் கைகளை நீட்டி நீதி கேட்டார்.
இப்படியாக சட்டப்பேரவையில் சூறாவளியாக முழங்கினார் ஜி.கே.மணி.அதைக் கேட்ட முதலமைச்சரும், அவை முன்னவரும் வன்னியர்களுக்கு விரைவாக சமூக நீதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளனர்.