தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் இன்று (18.04.2023) திடீர் ஆய்வு மேற்கொண்டார்கள். நல்லம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இருக்கை வாரியாக நிலுவை இனங்கள் குறித்தும், நீண்டநாளாக நிலுவையில் உள்ள நிலஅளவை மனுக்கள், மக்கள் குறை தீர்க்கும் மனுக்கள் மற்றும் பட்டா மாறுதல்கள் குறித்தும், பெறப்பட்ட மனுக்கள் மீதான தொடர்நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்கள்.

மேலும், பட்டா மாறுதல், முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவது குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்கள். நிலுவையில் உள்ள விண்ணப்பங்களின் விவரங்கள், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் ஆகியவை குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார்கள்.
பொதுமக்களிடமிருந்து பெறப்படும் கோரிக்கை மனுக்கள் மீது உடனுக்குடன் தீர்வு காணப்படுவதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள். நல்லம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி நிறுவனத்தின் இசேவை மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டு, இசேவை மையத்தில் விண்ணப்பிக்க வந்திருந்த விண்ணப்பதாரர்களிடம் கோரிக்கைகளையும் இசேவை மையத்தின் செயற்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தார்கள்.
இதனை தொடர்ந்து, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கட்டடத்தில் உள்ள உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) அலுவலகத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டார்கள். இந்த ஆய்வின்போது, தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் திருமதி.டி.கே.கீதாராணி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) திருமதி.மாலா, செயல் அலுவலர் திரு.ஜீவானந்தம், நல்லம்பள்ளி துணை வட்டாட்சியர்கள் திரு.சுதாகர், திரு.பாலகிருஷ்ணன், திரு.சண்முகம் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.