தருமபுரி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக (ம) நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் மற்றும் வேலைவாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் ஸ்ரீவிஜய் வித்யாலயா பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று (21.01.2023) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தலைமை வகித்தார்.

தமிழ்நாடு அரசு தமிழக மக்களின் வாழ்க்கை தரம் உயர்வதற்காக பொருளாதார மேம்பாட்டிற்காகவும் பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகின்றது. அந்த வகையில், இளைஞர்களின் எதிர்காலத்தினை கருத்தில்கொண்டு அவர்களுக்கு பல்வேறு வாய்ப்புகளை ஏற்படுத்தி தருகின்றது. படித்து வேலை தேடும் இளைஞர்களுக்கு தனியார் துறைகளில் பணியமர்த்தம் செய்யும் நோக்கத்தோடு தமிழ்நாடு அரசு சார்பில் இளைஞர்களுக்கு பல்வேறு பயிற்சி திட்ட முகாம்களும், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலம் அரசு துறையின் மூலம் வெளியிடப்படும் போட்டித்தேர்வுகளுக்கு இளைஞர்களுக்கு முறையான வகுப்புகளும் இலவசமாக நடத்தி வருகின்றது.
அதுமட்டுமின்றி, வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் தமிழக அரசால் அவர்களின் கல்வித்தகுதிக்கு ஏற்றாற்போல் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இம்முகாமில் கலந்து கொண்ட படித்த மற்றும் படிக்காதவர்களும் பல்வேறு நிறுவனங்களின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள தாங்கள் விரும்பும் வேலைவாய்ப்பினை பெற வாய்ப்பு ஏற்படுத்தி தரப்பட்டது.
அந்தவகையில், இன்றைய தினம், படிக்காத மற்றும் படித்த வேலை தேடும் இளைஞர்கள், ஆண், பெண் இருபாலரும் 18 வயதிற்கும் மேற்பட்டவர்கள் எட்டாம் வகுப்பு முதல் பட்டதாரிகள்வரை, ஐ.டி.ஐ, டிப்ளமோ மற்றும் பொறியியல் பட்டம் பெற்றவர்கள் இவ் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டனர். இன்று நடைபெற்ற மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில், 52 மாற்றுத்திறனாளிகள் உட்பட 4644 வேலைநாடுநர்கள் பங்கேற்றனர்.
பெங்களுர், சென்னை, கோவை, திருச்சி, கிருஷ்ணகிரி, சேலம் போன்ற மாவட்டங்களை சார்ந்த 239 முன்னணி தொழில் நிறுவனங்கள் மற்றும் 15 திறன்பயிற்சி நிறுவனங்கள் கலந்து கொண்டனர். மேலும், 1201 நபர்கள் (8 மாற்றுத்திறனாளிகள்) பல்வேறு தனியார் நிறுவனங்களில் பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் தருமபுரி சட்ட மன்ற உறுப்பினர் திரு. எஸ்.பி.வெங்கடேஷ்வரன், பென்னாகரம் சட்ட மன்ற உறுப்பினர் திரு. ஜி.கே.மணி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திருமதி.வெ.தீபனாவிஸ்வேஸ்வரி இ.ஆ.ப., முன்னாள் அமைச்சர் முனைவர் திரு.பி.பழனியப்பன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.தடங்கம்.பெ.சுப்பிரமணி, தருமபுரி நகரமன்ற தலைவர் திருமதி. மா.லட்சுமி, வேலைவாய்ப்பு துறை மண்டல இணை இயக்குநர் திருமதி.லதா, தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் திருமதி.ம.தீபா, ஸ்ரீ விஜய் வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தலைவர் திரு.சி.மணிவண்ணன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு.தாமரைச்செல்வன், திரு.எம்.ஜி.சேகர் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.