கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் 2021-2022 நிதி ஆண்டில் ஆதி திராவிட பழங்குடியின விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் ஆழ்துளை கிணறு அல்லது குழாய் கிணறுகள் ரூ.12 கோடி செலவில் மின் மோட்டாருடன் நுண்ணீர் பாசன வசதி அமைத்துத் தரப்படும் என மாண்புமிகு வேளாண் துறை அமைச்சர் அவர்கள் பேரவையில் அறிவித்தார்கள்.
அதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் பாசன நீர் வசதி இல்லாத இடங்களில் 200 சிறு, குறு விவசாயிகள் பயன்பெறும் வகையில், நிலத்தடி நீர் பாதுகாப்பான குறு வட்டங்களில் (Safe Firka) வேளாண்மை பொறியியல் துறை மூலம் செயல்படுத்திட தமிழ்நாடு அரசு 09.03.2022 அன்று ஆணை பிறப்பித்து பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களில் உள்ள நிலத்தடி நீர் பாதுகாப்பாக உள்ள குறுவட்டங்களில் ஆதி திராவிட, பழங்குடியின பிரிவினைச் சார்ந்த சிறு, குறு விவசாயிகள் பயன்பெறும் வகையில் இத்திட்டத்தினை செயல்படுத்த 07.12.2022 அன்று அரசாணை வெளியிடப்பட்டள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் தீர்த்தமலை உள்வட்டத்தில் சிட்டிலிங், வேடகட்டமடுவு, செல்லம்பட்டி பகுதிகளிலும் சுஞ்சல்நத்தம் உள் வட்டத்தில் தொண்ணகுட்ட அள்ளி, நாகமரை பகுதிகளிலும் உள்ள ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையினரால் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 2021-2022 (கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்ட ஊராட்சிகள்) ஆம் ஆண்டு பணி மேற்கொள்ள தேர்வு செய்யப்பட்ட 5 கிராம பஞ்சாயத்துகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
எனவே, இத்திட்டத்தில் பயனடைய விரும்பும் மானாவாரி விவசாயிகள் குறைந்தது (1 முதல் 5 ஏக்கர் வரை) உரிய வருவாய் துறையின் மூலம் வழங்கப்பட்ட சிறு/குறு விவசாயி சான்று பெறப்பட வேண்டும். சாத்தியமுள்ள இடங்களில் சூரிய சக்தி மூலம் இயக்கப்படும் பம்பு செட் (அதிகபட்சம் 10 குதிரைத்திறன் வரை) அமைத்திட வேண்டும்.
பாதுகாப்பான குறுவட்டங்களில் உள்ள தொன்னகுட்டஹள்ளி, நாகமரை, வேடகட்டமடுவு, செல்லம்பட்டி மற்றும் சிட்லிங்கில் உள்ள SC/ST பயனாளிகள் இத்திட்டத்தில் பயன்பெறலாம். இத்திட்டத்தின் கீழ் இடத்திற்கு ஏற்றவாறு, திறந்த வெளி கிணறு அல்லது ஆழ்துளை கிணறு அமைத்தல் நீரினை இறைப்பதற்கு மின்சார சக்தி மூலம் / சூரிய சக்தி மூலம் இயங்கக்கூடிய பம்பு செட்டுகள் நிறுவுதல், பாசன நீரினை வீணாக்காமல் சாகுபடி செய்யப்படும் வயலுக்கு அருகில் கொண்டு செல்வதற்கு பாசன நீர் குழாய்கள் நிறுவுதல் மற்றும் நுண்ணீர் பாசன அமைப்புகளை நிறுவுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
இத்திட்டம் “பிரதம மந்திரி நீர்ப்பாசனத் திட்டம்”- ஒவ்வொரு வயலுக்கும் நீர் நிலத்தடி நீர்ப் பாசனத் திட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி செயல்படுத்தப்படும். அரசினால் நிர்ணயிக்கப்பட்ட(100m) ஆழத்திற்கு மேல் ஆழ்துளை கிணறு அமைக்க வேண்டும் என்றாலோ, 10hpக்கு கூடுதல் குதிரைத்திறன் கொண்ட பம்பு செட்டுகள் நிறுவ வேண்டும் என்றாலோ, அதற்கான கூடுதல் செலவினை சம்பந்தப்பட்ட விவசாயிகளே ஏற்றுக் கொள்ள வேண்டும்.

சிறு மற்றும் குறு விவசாயிகளாக உள்ள ஆதி திராவிட மற்றும் பழங்குடியின விவசாயிகள் பயன் பெறும் வகையில், பாசன அமைப்புகளை உருவாக்கி தங்களது நிலத்தில் சாகுபடியினை மேற்கொள்ள வேண்டும் என்ற உயரிய எண்ணத்தில் தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியுள்ள இத்திட்டத்தினை வேளாண் பெருமக்கள் பயன்படுத்திட கீழ்கண்ட அலுவலகங்களை அணுகி பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
- செயற்பொறியாளர்(வே.பொ), வேளாண்மை பொறியியல் துறை மாவட்ட ஆட்சியர் வளாகம், தருமபுரி , 04342296948,
- உதவிசெயற்பொறியாளர்(வே.பொ), வேளாண்மை பொறியியல் துறை மாவட்ட ஆட்சியர் வளாகம்,தருமபுரி ,04342 296132,
- உதவிசெயற்பொறியாளர்(வே.பொ) ,வேளாண்மை பொறியியல் துறை ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகம் ,திருப்பத்தூர் மெயின் ரோடு அரூர்,தருமபுரி மாவட்டம், 04346296077
இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
