தமிழ்நாடு வணிகர் சங்கங்கங்களின் பேரமைப்பின் தருமபுரி மாவட்ட வணிகர்கள் மாவட்ட தலைவர் வைத்திலிங்கம் தலைமையில், மாவட்ட துணை வணிகவரி ஆணையர் திருமதி. ஹேமா அவர்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனுவினை அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது, வணிக வரித்துறை அதிகாரிகள் டெஸ்ட் பர்சேஸ் என்ற பெயரில், சில்லறை வணிகம் செய்யும் வணிகர்களிடம் பொருட்கள் வாங்கி அதை டெஸ்ட் பர்சேஸ் என குறிப்பிட்டு அதற்கு அபராதமாக ரூபாய் 20000 வரை வசூலிக்கிறார்கள்.

அனைத்து சில்லறை கடைக்காரர்களும் தங்கள் பொருட்களை வாங்கும்போது அதற்கான வரி செலுத்தியே பொருட்களை வாங்கி வந்து அதை பொதுமக்களுக்கு விற்பனை செய்கிறார்கள். பொது மக்களுக்கு விற்பனை செய்யப்படும் பொருட்கள் ஏற்கனவே வரி விதிப்பிற்கு உட்பட்டது. ஆனாலும் வணிகவரித்துறை அதிகாரிகள் சில்லறை கடைகளில் டெஸ்ட் பர்சேஸ் என்ற பெயரில் பொருட்களை வாங்கி அதற்கு ரசீது அளிக்கப்படவில்லை என்று கூறி அபராதம் விதிக்கும் முறை ஏற்படுவது அல்ல. இதில் சில்லறை, சிறு, குறு வணிகர்களின் வாழ்வாதாரத்தையே மிகப்பெரும் கேள்விக்குறியாக்கும் செயலாகும்.
வரி ஏய்ப்பு செய்கிறவர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கருத்துக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு எதிரானது அல்ல. அதற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு துணை நிற்கும். சில்லறை சிறு குறு வணிகர்கள் வணிகர்களை பாதிக்காத வகையில் 6 மாதங்கள் டெஸ்ட் பர்ச்சேஸ் நடைமுறையை நிறுத்தி வைத்து, வணிகர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி அதன் பிறகு படிப்படியாக செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
