தருமபுரி மாவட்ட வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, வேளாண் அறிவியல் நிலையம் பாப்பாரப்பட்டி இணைந்து உலக உணவு தினத்தினை ஒட்டி உயர்தர உள்ளுர் ரகங்களை பிரபலப்படுத்துவதற்கான கருத்தரங்கு மற்றும் கண்காட்சி இன்று பாப்பரப்பட்டியில் நடந்தது. இதில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் திருமதி. கி. சாந்தி, இ.ஆ.ப. அவர்கள் கலந்துகொண்டு கண்காட்சியினை பார்வையிட்டார், இதில் 20க்கும் மேற்பட்ட பாராம்பரிய விவசாயிகள் காட்சிப்படுத்தியிருந்த 200க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் ரக விதைகள், பயிர்கள், 100க்கும் மேற்பட்ட காய்கறி விதைகள், காட்சிப்படுத்ப்பட்டிருந்தன, இதில் 6 அடி உயரமான காட்டுயானம், வெள்ளத்தினால் பாதிக்கப்படாத மஞ்சள், வெள்ளை ராகி மற்றும் பாரம்பரிய ரகங்களின் தொகுப்பு பார்வையாளர்களை கவர்ந்தன, இக்கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தொடங்கி வைத்து பேசும்போது தெரிவித்ததாவது: மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் அவர்களால் தமிழ் நாட்டில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் விவசாயத்திற்கான தனியே ஒரு நிதிநிலை அறிக்கையினை 2022-23ம் ஆண்டு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட போது, அறிவிக்கப்பட்ட உள்ளுர் இரகங்களை பிரபலப்படுத்துவதற்கான கருத்தரங்கு மற்றும் கண்காட்சி மிகச் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
அந்தவகையில் தருமபுரி மாவட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மற்றும் பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் நிலையம் ஆகியவை இணைந்து உலக உணவு தினத்தினை முன்னிட்டு நடத்திய தானியங்கள், பயிறுவகைகள், காய்கறிகள் உள்ளிட்ட உயர்தர உள்ளூர் இரகங்கள் பிரபலப்படுத்துவதற்கான கண்காட்சி இன்றைய தினம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதனை விவசாயிகள் முழுமையாக பயன்படுத்தி கொண்டு, இக்கண்காட்சியினை பார்வையிட்டு உள்ளூர் ரகங்களை பற்றிய விவரங்களை அறிந்து, சாகுபடி செய்திட முன்வர வேண்டும்.
இக்கண்காட்சியின் முக்கியமான நோக்கம் இந்த பாரம்பரிய ரகங்களின் கருத்தரங்கு மற்றும் கண்காட்சிகள் நடத்தி விவசாயிகள் தங்களிடையே உள்ள பல்வேறு பயிர்களில் உள்ள சிறப்பான உள்ளுர் ரகங்களை காட்சிப்படுத்துவதன் முலம் தனிச்சிறப்பு வாய்ந்த நமக்கு தேவையான விரும்பத்தக்க குணங்களை உடைய பாரம்பரிய ரகங்களை கண்டறிந்து, இந்த இரகங்களை மேம்பாடு செய்தால் அந்தந்த பகுதிகளுக்கேற்ற சிறந்த ரகங்களை உருவாக்க முடியும்.
பாரம்பரிய ரகங்கள் பயிரிடுவதில் தற்போது விவசாயிகளிடையே அதிக ஆர்வம் உள்ளது. இதில் விவசாயிக்கு விதைக்கான செலவு இல்லை. பாரம்பரிய ரகங்கள் இயற்கை இடர்பாடுகளை தாங்கி வளரும். இரசாயன உரங்கள் தேவை இல்லை. சுவை அதிகம், தனித்தன்மை உடையது, பூச்சி நோய் தாக்குதல் குறைவு, தரமான மகசூல். ஒவ்வொரு ரகமும் தனித்தன்மை வாய்ந்தது. அதிக விலைக்கு விற்கலாம். மருத்துவ குணம் வாய்ந்தது. தற்போது பராம்பரிய ரகங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது, கூடுதல் விலை கிடைக்கும், மதிப்பு கூட்டி விற்பனை செய்யலாம், ஏற்றுமதி வாய்ப்பும் அதிகம் உள்ளது.
இதன் மூலம் விவசாயிகளுக்கு அதிக வருவாய் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. தற்போது பாரம்பரிய ரகங்களை ஊக்குவிக்கும் வகையில் வேளாண் துறை கிடங்கிலேயே மானிய விலையில் பாரம்பரிய நெல் வகைகள் இந்த ஆண்டு முதல் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது தருமபுரி மாவட்டம் சிறுதானிய மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது, இனிமேல் நியாவிலைக் கடைகளிலும் இராகி போன்ற சிறுதானியங்கள் விரைவில் கிடைக்கும். இதனால் சிறுதானியம் விளைவிப்போருக்கு நல்ல விலை கிடைக்கும் வாய்ப்பு உருவாகும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்தார்.
இக்கண்காட்சியில் தருமபுரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் (பொ) திரு.முகமது அஸ்லாம், தோட்டக்கலை துணை இயக்குநர் திருமதி.மாலினி, வேளாண் வணிக துணை இயக்குநர் திரு.கணேசன், நேர்முக உதவியாளர் (வேளாண்மை) திரு.குணசேகரன், பையூர் மண்டல ஆராய்ச்சி நிலைய தலைவர் பரசுராமன், பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் நிலைய தலைவர் திருமதி.வெண்ணிலா மற்றும் பேராசிரியர்கள், உதவிசெயற் பொறியாளர் திரு.அறிவழகன், பென்னாகரம் வேளாண்மை உதவி இயக்குநர் சுப்பிரமணி, மீன்வள உதவி இயக்குநர் திரு.கோகுலரமணன், தருமபுரி மரபு சந்தை ஒருங்கிணைப்பாளர் திரு.உமாசங்கர், இயற்கை விவசாயிகள் மற்றும் விவசாய பெருமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டு கண்காட்சியினை பார்வையிட்டனர்.