தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இஆப., அவர்கள் தலைமையில் இன்று (10.10.2022) நடைபெற்றது.
இக்குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் சாலை வசதி, குடிநீர் வசதி, பேருந்து வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் வேண்டியும், பட்டா மற்றும் சிட்டா பெயர் மாற்றம், பட்டா வேண்டுதல், புதிய குடும்ப அட்டை வேண்டுதல், வாரிசு சான்றிதழ், வேலைவாய்ப்பு, இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் ஓய்வூதியத் தொகை உள்ளிட்ட இதர உதவித் தொகைகள் உட்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகைகள், உதவி உபகரணங்கள் வேண்டியும் மொத்தம் 446 மனுக்கள் வரப்பெற்றன.
பெற்றுகொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இஆப., அவர்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் அம்மனுக்களை வழங்கி, அம்மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு தகுதியான மனுக்களுக்கு உரிய தீர்வினை உடனுக்குடன் வழங்கிட வேண்டுமெனவும், பொதுமக்கள் அளிக்கின்ற கோரிக்கை மனுக்கள் மீது துறை அலுவலர்கள் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு அதற்கான தீர்வினை விரைந்து காண வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இம்மனுக்களை இம்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தருமபுரி மாவட்டம், தருமபுரி வட்டம், பாப்பிநாயக்கனஅள்ளி, சிறுபிள்ளை கிராமத்தைச் சேர்ந்த திருமதி.மு.பூங்கொடி, க/பெ.முருகன் தம்பதியினரின் குழந்தைகள் இனியா மற்றும் சிவானி ஆகிய இரண்டு குழந்தைகள் எதிர்பாராதவிதமாக ஓடை குட்டையில் மூழ்கி உயிரிழந்ததை முன்னிட்டு, இரண்டு குழந்தைகளுக்கும் தலா ரூ.1.00 இலட்சம் வீதம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வரப்பெற்ற ரூ.2.00 இலட்சத்திற்கான காசோலையினை அவரது தாயார் திருமதி.மு.பூங்கொடி அவர்களிடம் வழங்கினார்கள்.
இம்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, திட்ட இயக்குநர் (பொ) / திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) திரு.பாபு, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) திருமதி. வி.கே.சாந்தி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் திரு.வி.ராஜசேகரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அலுவலர் திருமதி.உஷாராணி உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


