Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுக் கணக்குக் குழு 2021-2023 ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை, மாண்புமிகு பொதுக் கணக்குக் குழுத் தலைவர் திரு. கு. செல்வபெருந்தகை அவர்கள் தலைமையில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை, பொதுக் கணக்குக் குழு 2021-2023 ஆய்வுக்கூட்டம் நேற்று நடைபெற்றது.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை, பொதுக் கணக்குக் குழு 2021-2023 ஆய்வுக்கூட்டம் நேற்று (11.10.2022) நடைபெற்றது. 

இக்கூட்டத்திற்கு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை, மாண்புமிகு பொதுக் கணக்குக் குழுத் தலைவர் திரு. கு. செல்வபெருந்தகை அவர்கள் தலைமைவகித்தார். இந்த ஆய்வுக்கூட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை. பொதுக் கணக்குக் குழு உறுப்பினர்கள் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் திரு. பி.ஆர்.ஜி அருண் குமார் அவர்கள், காட்டுமன்னார் கோவில் சட்டமன்ற உறுப்பினர் திரு. ம. சிந்தனை செவ்வன் அவர்கள், ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. ஓய். பிரகாஷ்
அவர்கள், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. பூண்டி. கே. கலைவாணன் அவர்கள், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் திரு. ஈ. ராஜா அவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்கள். இக்கூட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை செயலாளர் முனைவர்.கி.சீனிவாசன் அவர்கள், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை சார்பு செயலாளர் திரு.கி. ஜெ. பாலசீனிவாசன் அவர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

இந்த ஆய்வு கூட்டத்தில் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜி.கே.மணி அவர்கள், தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.பி.வெங்கடேஸ்வரன் அவர்கள் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.

பின்னர் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை. மாண்புமிகு பொதுக் கணக்குக் குழுவின்
தலைவர் / ஸ்ரீ பெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. கு. செல்வபெருந்தகை அவர்கள் பேசும்போது தெரிவித்ததாவது: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை, பொதுக் கணக்குக் குழு இன்றைய தினம் தருமபுரி மாவட்டத்திற்கு வருகைதந்து காலை முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று, பல்வேறு திட்டப்பணிகளை. வளர்ச்சி திட்டங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தது. இதில் குறிப்பாக பென்னாகரம், ஓகேனக்கல்லில் மீன்வளத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மீன்பண்ணையினை மேம்படுத்தி, மீன்குஞ்சுகள் உற்பத்தி செய்யும் வசதிகளை ஏற்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும், வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள முதலைப்பண்ணையினை ஆய்வு செய்த போது அங்கு பணிபுரிந்த வரும் 4 பணியாளர்களுக்கு ஊதிய குறைபாடு இருப்பது குறித்து அறியப்பட்டு, உடனடியாக அவர்களுக்கு அரசு நிர்ணயித்துள்ள ஊதியத்தினை வழங்குதற்கு உரிய நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ள வேண்டுமெனவும் இக்குழு பரிந்துரைத்தது. 
இக்குழுவின் பரிந்துரையை ஏற்று. காலையில் இட்ட உத்தரவிற்கு உடனடி நடவடிக்கையினை மேற்கொண்டு, மாலையில் நடைபெறுகின்ற இந்த ஆய்வு கூட்டத்திலேயே அந்த 4 பணியாளர்களுக்கும் ஊதிய மாறுபாட்டினை சரிசெய்து, ஊதிய உயர்வோடு நிலுவைதொகைக்கான காசோலைகளை ஒவ்வொரு நபருக்கும் மாதம் ஒன்றிற்கு ரூ.8,550 வீதம் 3 மாதங்களுக்கு தலா ரூ.25,650/- என 3 நபர்களுக்கு ரூ.76,950/-யும், ஒரு நபருக்கு மாதம் ஒன்றிற்கு ரூ.8,075/- வீதம் 3 மாதங்களுக்கு ரூ.24,225/-ம் ஆக மொத்தம் 4 பணியாளர்களுக்கும் ரூ.1.01,175/-க்கான காசோலைகள் வழங்கப்பட்டுள்ளது மிகுந்த பாராட்டிற்குரியது. 

இக்குழுவின் பரிந்துரையை ஏற்று உடனடி நடவடிக்கை மேற்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கும், துறை அலுவலர்களுக்கும் இக்குழு பாராட்டுகளை தெரிவித்துகொள்கிறது.

மேலும், இக்குழு பென்னாகரம் அரசு ஆதிதிராவிடர் மாணவர் விடுதியினை ஆய்வு செய்த போது, இவ்விடுதி மிகச்சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருவதையும், மாணவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் இவ்விடுதியில் ஏற்படுத்தப்பட்டு உள்ளதையும் இக்குழு வெகுவாக பாரட்டியதோடு, உடனடியாக மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் அவர்களுக்கு தொலைபேசியின் மூலம் தொடர்புகொண்டு, தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் உள்ள ஆதிதிராவிடர் மாணவர் விடுதி மிகச்சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது. 

விடுதியில் தங்கி பயிலும் மாணவர்களுக்கான அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதை முன்னுதாரணமாக கொண்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள விடுதிகளை இதேபோல் பராமரிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.

மேலும், பென்னாகரம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு செய்த அங்கு வேளாண்மை பாடப்பிரிவில் பணியாற்றுகின்ற ஆசிரியர் திரு.எம்.கிருஷ்ணன் அவர்கள் தனது சொந்த செலவில் ரூ.40,000/- நிதியில் நவீன புரொஜெக்டர் வாங்கி அதன் மூலம், மாணவர்களுக்கு சிறந்த கல்வியை கற்பித்து வருவதற்கும், இவரிடம் படித்த மாணவர்கள் இந்திய ஆட்சிப்பணி மற்றும் இந்திய காவல்பணியில் பணிபுரிந்து வருகின்றார்கள் என்று அவர் கூறிய போது, இக்குழு மிகுந்த மகிழ்ச்சி அடைந்ததோடு, அந்த ஆசிரியரை இக்குழு பாராட்டி இதேபோல் இன்னும் பல ஆசிரியர்கள் சிறப்பாக செயல்பட்டால் மாணவர்களுக்கு சிறந்த கல்வி கிடைக்கும் என்பதை இக்குழு கருத்தில் கொண்டு மேலும், பல பள்ளிகளில் இதுபோன்று ஆசிரியர்கள் சிறப்பாக பணியாற்றிட வேண்டுமென இக்குழு கேட்டுகொண்டு, ஆசிரியரின் பணியினை பாராட்டுகிறது.

எனவே, தருமபுரி மாவட்டத்தில் அரசின் திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அரசின் திட்டங்களை தருமபுரி மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்தி வரும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கும், அனைத்து அலுவலர்களுக்கும் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை, பொதுக் கணக்குக் குழு பாராட்டுகளை தெரிவித்துகொள்வதோடு, அரசின் திட்டங்களை மேலும், சிறப்பாக செயல்படுத்தி, தருமபுரி மாவட்டத்தின் வளர்ச்சிக்கு முனைப்போடு பணியாற்றிட வேண்டும் என இக்குழு கேட்டுகொள்கிறது.

இவ்வாறு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை, மாண்புமிகு பொதுக் கணக்குக் குழுவின் தலைவர் / ஸ்ரீ பெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.கு. செல்வபெருந்தகை அவர்கள் தெரிவித்தார்.

இந்த ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட வன அலுவலர் திரு.கே.வி.அப்பால நாயுடு இவப, மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.சு.அனிதா, மாவட்ட வருவாய் அலுவலர் / தருமபுரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலை (பாலக்கோடு) மேலாண்மை இயக்குநர் திரு.ந.சக்திவேல், தருமபுரி சார் ஆட்சியர் திருமதி.சித்ரா விஜயன் இஆப, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, திட்ட இயக்குநர் (பொ) / திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) திரு.பாபு. மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) (பொ) / உதவி ஆணையர் (கலால்) திரு.தணிகாசலம், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் திரு.ஜெயக்குமார். மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்) திருமதி.எம்.சுமதி உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies