போலி மந்திரவதியால் தமிழக பெண் உள்பட கேரளாவில் இரண்டு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்டு புதைக்கப்பட்டதாக வெளியான செய்திகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பத்மா என்பவரைதான் நரபலி கொடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளதால் அந்த கிராமத்தினரும் உறவினர்களும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
தர்மபுரியை சேர்ந்தவர் பத்மா, சில வருடங்களாக கேரள மாநிலம், கொச்சி அருகே உள்ள பொன்னுருன்னி பகுதியில் வசித்து வந்தார். கடவந்திரா என்ற இடத்தில் லாட்டரி விற்று வந்தார். கடந்த மாதம் 26ம் தேதி லாட்டரி விற்பனைக்காக சென்ற இவர் பின்னர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் அளித்த புகாரின் பேரில், கொச்சி போலீசார் விசாரித்தனர்.
நாகவதி அணை அருகேவுள்ள எர்ரப்பட்டி கிராமத்தை சேர்ந்த ரங்கன்,70 என்பவரது மனைவி பத்மா என்பது தெரிய வந்தது, இதனை தொடர்ந்து சம்மந்தபட்ட எர்ரப்பட்டி கிராமத்திற்கு பெரும்பாலை போலீசார், உளவுப்பிரிவு போலீசார், வருவாய்த்துறையினர் விசாரணை நடத்தினர். தோட்ட வேலைக்கு சென்ற பத்மா கேரளாவில் நரபலி கொடுக்கப்பட்டார் என்ற தகவல் கேரள மற்றும் தமிழக ஊடங்களில் அடுத்தடுத்து செய்திகள் வெளியானதை தொடர்ந்து கிராமமே பரபரப்புக்குள்ளானது.ரங்கன் மற்றும் பத்மா ஆகியோர் கடந்த இருபது வருடகளுக்கு மேலாக கேரளாவில் பணிபுரிந்து வருவதாகவும், தீபாவளி, பொங்கல், வீட்டு விசேஷங்கள், கோவில் திருவிழாக்களுக்கு அவ்வப்போது சொந்த ஊருக்கு வந்து செல்வார்கள் என்றும் வயது மூப்பு காரணமாக ரங்கன் சொந்த கிராமமான எர்ரப்பட்டி கிராமத்திலேயே இருந்து வருவதாகவும், பத்மா மற்றும் அவரது தங்கை பழனியம்மாள் ஆகியோர் கேரளாவில் பணி செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
பத்மாவின் உடலை அடையாளம் காண பத்மாவின் தங்கை பழனியம்மாள், மற்றும் மகன் செல்வராசு, உறவினர்கள் ராமு முனியப்பன் நான்கு பேரை பத்தினம்திட்டா என்ற இடத்தில் அறை ஒன்றில் கேரள போலீசார் அடைத்து வைத்திருப்பதாக தருமபுரியிலுள்ள உறவினர்களுக்கு கேரளாவிலிருந்து செல்போனில் தொடர்புகொண்டு தகவல் தெரிவித்து வருவதாக பத்மாவின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.



