நவம்பர்– 1 உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு தருமபுரி மாவட்த்தில் 01.11.2022 அன்று கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 30 அக்டோபர், 2022

நவம்பர்– 1 உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு தருமபுரி மாவட்த்தில் 01.11.2022 அன்று கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

நவம்பர்– 1 உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு தருமபுரி மாவட்த்தில் உள்ள 251 கிராம ஊராட்சிகளிலும் வருகின்ற 01.11.2022 அன்று கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தகவல் இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்துள்ளதாவது: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடந்த 22.04.2022 அன்று நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவையில் விதிகள் எண்.110 ன் கீழ் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 1-ஆம் நாள் உள்ளாட்சிகளின் தினமாகக் கொண்டாடப்படும் என அறிவித்தார்கள். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் இந்த அறிவிப்பிற்கிணங்க உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாட்டில் ஒளிவுமறைவற்ற வெளிப்படைத் தன்மையினை ஏற்படுத்த வேண்டியும், உள்ளாட்சி அமைப்புகளின் சாதனைகள் மற்றும் திட்டச் செயலாக்கங்கள் குறித்து தகவல், கல்வி மற்றும் தொலை தொடர்பு இயக்கங்கள் நடத்தவும் ஏதுவாக நவம்பர் 1-ஆம் நாளினை உள்ளாட்சிகள் தினமாகக் கொண்டாட ஆவண செய்யப்பட்டுள்ளது.


ஒவ்வொரு ஆண்டும் இதுவரையில் வருடத்திற்கு 4 முறை கிராமசபைகள் முறையே சுதந்திர தினம் (ஆகஸ்ட் 15), தொழிலாளர் தினம் (மே 1), குடியரசு தினம் (ஜனவரி 26) மற்றும் காந்தி ஜெயந்தி (அக்டோபர் 2) நடத்தப்பட்டு வந்தன. தற்போது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைப்படி வருடத்திற்கு 6 முறை கிராம சபை கூட்டம் நடத்தப்பட உள்ளது. 


அதாவது ஏற்கனவே மேற்குறிப்பிட்டுள்ளவாறு நடைபெற்று வரும் 4 கிராம சபை கூட்டங்களோடு, கூடுதலாக உள்ளாட்சிகள் தினம் (நவம்பர் 1) மற்றும் உலக தண்ணீர் தினம் (மார்ச் 22) ஆகிய 2 தினங்களில் கிராம சபை கூட்டங்கள் நடைபெறும்.


மாண்புமிகு முதல்வர் அவர்களின் அறிவிப்பிற்கிணங்க 2022-ஆம் ஆண்டு முதல் நவம்பர் 1-ஆம் நாள் உள்ளாட்சிகள் தினத்தைக் கொண்டாடும் வகையில் கிராமசபைக் கூட்டங்கள் நடத்துதல், கண்காட்சி நடத்துதல், சிறந்த ஊழியர்களை அங்கீகரித்தல் மற்றும் கலந்துரையாடல்கள் போன்ற நிகழ்வுகள் நடைபெற உள்ளது.


நவம்பர் 1- ஆம் நாள் உள்ளாட்சிகள் தினத்தை கொண்டாடும் வகையில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள 251 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடத்துதல், கண்காட்சி நடத்துதல், சிறந்த ஊழியர்களை அங்கீகரித்தல் மற்றும் கலந்துரையாடல் போன்ற நிகழ்வுகளும் நடைபெற உள்ளன.


மேலும், இக்கிராம சபைக் கூட்டத்தில் நவம்பர் 1 ஆம் நாளினை உள்ளாட்சிகள் தினமாக அறிவித்த மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு நன்றி தெரிவித்தல், சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களை சிறப்பித்தல், சிறப்பாக செயல்படும் மகளிர் சுய உதவிகுழுக்களை கவுரவித்தல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், 2022 - 23 ஆம் ஆண்டு அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்-II ன் கீழ் ஊராட்சிகளில் தேர்வு செய்யப்பட்டுள்ள பணிகளின் முன்னேற்ற விவரம் கிராம சபை கூட்டத்தில் தகவலுக்காக வைத்தல், கலைஞர் வீடு வழங்கும் திட்ட கணக்கெடுப்பு, ஜல் ஜீவன் இயக்கம், மக்கள் திட்டமிடல் இயக்கம் (people’s plan campaign), கிராம வறுமை குறைப்பு திட்டம் (Village Poverty Reduction Plan), கிராம வளர்ச்சிக்கான நிறைவான சுகாதாரத் திட்டம்(Village Sanitation Saturation Plan), கிராம வளர்ச்சிக்கான நிறைவான குடிநீர் திட்டம் (Village Water supply Saturation Plan), அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித்திட்ட ஒருங்கிணைப்பு திட்டம் (AGAMT Convergence Plan), கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல், இணையவழி வீட்டுவரி / சொத்துவரி செலுத்துதல், மகளிர் சுய உதவிக் குழு உருவாக்குதல், சுழற்சி முறையில் நிர்வாகிகளை மாற்றம் செய்தல், 2021-2022 மற்றும் 2022-2023 ஆகிய ஆண்டுகளில் செயல்படுத்தப்படும் பண்ணை மற்றும் பண்னை சாரா திட்ட இனங்களின் மேற்கொள்ளப்பட்ட நிதிசெலவின அறிக்கை, பயனாளிகள் விவரம் மற்றும் நிதி பயன்பாடு குறித்து அறிக்கை, மக்கள் நிலை ஆய்வு, மக்கள் நிலை ஆய்வுப் பட்டியலில் விடுபட்ட / புதிய இலக்கு மக்கள் குடும்பங்களை சேர்த்தல், சுகாதாரம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் மற்றும் தற்போது நடைபெற்று வரும் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் குறித்து இக்கிராமசபைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளன.


எனவே தருமபுரி மாவட்டத்தில் உள்ள வருகின்ற 01.11.2022 செவ்வாய்க்கிழமை அன்று 251 கிராம ஊராட்சிகளிலும் காலை 11.00 மணியளவில் நடைபெற உள்ள உள்ளாட்சிகள் தின கிராம சபைக் கூட்டங்களில் பொது மக்கள் அனைவரும் கலந்து கொண்டு விவாதத்தில் பங்கு பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad