தருமபுரி மாவட்டம், தருமபுரி நகராட்சிக்குட்பட்ட மதிகோண்பாளையம் அருகில் உள்ள இராமக்காள் ஏரியினை மேம்படுத்துவது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் இன்று (26.08.2022) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.
தருமபுரி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இராமக்காள் ஏரியானது 205 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரியாகும். இதன் அருகாமையில் உள்ள சுமார் 265 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுவதற்கு இந்த ஏரி வாய்ப்பாக அமைந்துள்ளது. தருமபுரி நகராட்சியில் அமைந்துள்ள மிகப்பெரிய பரப்பளவு கொண்ட நீர் நிறைந்துள்ள இந்த ஏரியின் கரைகள் மற்றும் நுழைவுவாயில்கள் ஆகியவற்றை செம்மைபடுத்தி, ஏரி கரையினை அழகுபடுத்தி, நடைப்பயிற்சி மேற்கொள்வோர் மற்றும் பொது மக்கள் பயன்பெறும் வகையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளுதல், பசுமை நிறைந்த மரங்கள் நடுதல், பூக்கள் நிறைந்த வனங்களை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்ட பகுதியாக இராமக்காள் ஏரிக்கரைப் பகுதிகளை மாற்றுவது குறித்தும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, நீர்வளத்துறை, தருமபுரி நகராட்சி உள்ளிட்ட அலுவலர்கள் ஒன்றிணைந்து இப்பணிகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்கள்.
இந்த ஆய்வின் போது சார் ஆட்சியர் திருமதி.சித்ரா விஜயன் இஆப., தருமபுரி நகராட்சி ஆணையாளர் திருமதி.சித்ரா சுகுமார், நகராட்சி பொறியாளர் திரு.ஆர்.ஜெயசீலன், தருமபுரி வருவாய் வட்டாட்சியர் திரு.தன.ராஜராஜன், நீர்வளத்துறை உதவி பொறியாளர்கள் திருமதி.எம்.மோகனப்பிரியா, திருமதி.பி.மாலதி, நிலஅளவை அலுவலக மேலாளர் திருமதி.கல்பனா உட்ப தொடர்புடைய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


