பள்ளி விடுதிகளில் 4 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயில்கின்ற மாணவர்/ மாணவியர்களுக்கும் கல்லூரி / பாலிடெக்னிக் / ஐடிஐ விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு மற்றும் பாலிடெக்னிக் / ஐடிஐ படிப்புகளில் பயிலும் மாணவர்/ மாணவியர்கள் சேரத் தகுதியுடையவர்கள் ஆவர். பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் / மிகப்பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் / சீர்மரபினர் விடுதிகளில் அனைத்து வகுப்பைச் சார்ந்த மாணவர் / மாணவியர்களுக்கும் குறிப்பிட்ட விகிதாச்சார அடிப்படையில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர்.விடுதிகளில் எவ்வித செலவினமும் இல்லாமல் பின்வரும் சலுகைகள் வழங்கப்படுகின்றன. அனைத்து விடுதி மாணவர்/மாணவியர்களுக்கும் உணவும் தங்கும் வசதியும் அளிக்கப்படுகிறது. 10-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்/மாணவியருக்கு சீருடைகள் வழங்கப்படும். 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்/மாணவியருக்கு மலைப்பிரதேசங்களில் இயங்கும் விடுதிகளில் கம்பளி மேலாடைகள் வழங்கப்படும், சிறப்பு வழிகாட்டி நூல்கள் வழங்கப்படும்.
விடுதிகளில் சேருவதற்கான தகுதிகள்:-
- பெற்றோர் / பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.2,00,000/-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
- இருப்பிடத்திலிருந்து பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் 8 கி.மீ-க்கு மேல் இருக்க வேண்டும். இந்த தூர விதி மாணவியர்களுக்கு பொருந்தாது.
தகுதியுடைய மாணவர்/மாணவியர் விண்ணப்பங்களை சம்மந்தப்பட்ட விடுதி காப்பாளர் / காப்பாளினிகளிடமிருந்தோ அல்லது மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திலிருந்தோ இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பள்ளி விடுதிகளை பொறுத்தவரை சம்மந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளியினியிடம் மற்றும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் வருகின்ற 30.06.2022-க்குள்ளும், கல்லூரி விடுதிகளை பொறுத்தவரை வருகின்ற 31.07.2022-க்குள்ளும் சமர்ப்பிக்க வேண்டும். மாணவர் / மாணவியர்கள் விண்ணப்பிக்கும் பொழுது சாதி மற்றும் பெற்றோரது ஆண்டு வருமானம் குறித்த சான்றிதழ்கள் அளிக்கலாம் அல்லது விடுதியில் சேரும் பொழுதும் இச்சான்றிதழ்களை அளிக்கலாம்.
தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு விடுதியிலும் முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களின் குழந்தைகெளுக்கென தனியே 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு விடுதியிலும் மீட்கப்படும் குழந்தைத் தொழிலாளர்களை எக்காலத்திலும் எந்த நேரத்திலும் எந்தவித எந்தவித நிபந்தனைகளும் இல்லாமல் சேர்த்துக்கொள்ளவும் அவர்களது படிப்பு முடியும் வரை விடுதிகளில் தங்கிப் பயிலவும் அனுமதிக்கப்படுகிறது.
எனவே, மாணவ/மாணவியர்கள் அரசின் இச்சலுகைகளை பெற்று, விடுதிகளில் தங்கி சிறப்பான கல்வி பயில இவ்விடுதிகளில் சேர விருப்பமுள்ள மாணவ / மாணவியர்கள் உடன் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார்.
.gif)

