மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இ.ஆ.ப, அவர்கள் தகவல். இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி .ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளதாவது:- தமிழக அரசு வேளாண்மை பொறியியல் துறையின் மூலம், தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 'வேளாண் இயந்திரங்கள் மற்றும் சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் பழுது நீக்கும் பராமரிப்பு மையம்" மானியத்தில் அமைக்கும் புதிய திட்டத்தினை 2021-22 ஆண்டு முதல் செயல்படுத்தி வருகின்றது.
விவசாயிகள் தங்கள் வேளாண் இயந்திரங்கள் மற்றும் சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகளை தங்கள் விளைநிலங்களிலேயே பழுது நீக்கி பராமரிக்கவும், விவசாயிகள் வேளாண் பணிகளை எவ்வித இடர்பாடுகளுமின்றி குறித்த நேரத்தில் செய்திடவும், கிராமப்புற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி, நிலையான வருமானம் ஈட்டி பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் இம்மையங்கள் தொழில்முனைவோர், விவசாய குழுக்கள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு இம்மையங்கள் மானியத்தில் அமைத்துத் தரப்படும். இம்மையங்கள் ரூ.8.00 இலட்சம் செலவில் அமைக்கப்படுகின்றன. இதில் 50 சதவீத மானிய அடிப்படையில் அதிகபட்சமாக ரூ.4.00 இலட்சம் மானியம் வழங்கப்படும்.
மையங்கள் அமைக்க போதிய இடவசதியும், மும்முனைமின்சார இணைப்பும் கொண்ட கிராமப்புற இளைஞர்கள், தொழில்முனைவோர்கள், விவசாய குழுக்கள் மற்றும் உழவர் உற்பத்தி நிறுவனங்கள் தங்கள் அருகாமையிலுள்ள வேளாண் பொறியியல் துறையின் உதவிச் செயற்பொறியாளர் (வே.பொ) அலுவலகத்தை அணுகி விண்ணப்பத்தினை அளிக்கலாம். மாவட்ட ஆட்சித் தலைவரின் மாவட்ட அளவிலான செயற்குழு கூட்டத்தில் ஒப்புதல் பெற்ற பின்னரே பயனாளிகளுக்கு இம்மையம் மானியத்தில் அமைத்து தரப்படும்.
மையங்கள் அமைக்கத் தேவையான இயந்திரங்கள் ஒப்பந்தப் புள்ளி அடிப்படையில் கண்காணிப்புப் பொறியாளர் (வே.பொ) அவர்களால் முடிவு செய்யப்பட்டு பயனாளிகள் மொத்தத் தொகையினை செலுத்தி வாங்கிக் கொள்ளலாம். பின்னர் சம்மந்தப்பட்ட உதவி செயற்பொறியாளர் (வே.பொ) அவர்கள் மையத்தினை நேரில் ஆய்வு செய்து, திருப்தி அளிக்கும் வகையில் இருப்பின் மானியத் தொகையினை பயனாளியின் வங்கிக் கணக்கில் பின்னேற்பு மானியமாக செலுத்தப்படும். மேலும், விவரங்களுக்கு அருகாமையிலுள்ள வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் (வே.பொ), மாவட்ட ஆட்சியரகம், தருமபுரி- 636 705, மற்றும் உதவி செயற்பொறியாளர் (வே.பொ) ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகம், திருப்பத்தூர் மெயின்ரோடு, கச்சேரி மேடு, அரூர்-636 903 அலுவலகத்தை அணுகி பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது, என இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி ஆ.ப., அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார்.

