கொரோனா பெருந்தொற்று பரவலை முழுமையான வகையில் வெல்ல தடுப்பூசி ஒன்றே பேராயுதம் என்பதால் வருகின்ற 08.05.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 7.00 மணி முதல் மாலை 7.00 மணிவரை அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் மற்றும் 2286 சிறப்பு முகாம்களில் 100% தடுப்பூசி செலுத்துவதை இலக்காக கொண்டு "மெகா தடுப்பூசி முகாம்" நடைபெறவுள்ளது.
மாற்றுத்திறனாளிகள், வயது முதிர்ந்தோர் மற்றும் நடக்க முடியாத நபர்களுக்கு வீட்டிற்கே சென்று தடுப்பூசி போட சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், விடுபட்ட முன்களப்பணியாளர்கள், முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் மற்றும் இரண்டாவது தடுப்பூசி தவணை செலுத்திக் கொள்ளவுள்ள நபர்கள் தானாக முன்வந்து கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். மேலும், 12 வயது முதல் 18 வயதுடைய மாணவ, மாணவியர்கள் தவறாமல் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்.
மேலும் ஜூலை 2021-க்கு முன் இரண்டாவது தடுப்பூசி செலுத்திக் கொண்ட 60 வயதிற்கு மேற்பட்டவர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்களப்பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் தவறாது "பூஸ்டர் தடுப்பூசி" செலுத்திக்கொள்ளலாம். தருமபுரி மாவட்டத்தில் பொதுமக்கள் கூடும் இடங்களில் அனைவரும் கட்டாயம். முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்படுகிறது. அவ்வாறு முக்கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வருவோருக்கு ரூ.500 அரசு விதிப்படி அபராதம் வசூலிக்கப்படும். அரசு, தனியார் அலுவலகங்களில் பணிபுரியும் பணியாளர்கள் முககவசம் அணிந்து பணிபுரிய வேண்டும்.
பள்ளிகள், கல்லூரிகள் ஆகிய கல்வி நிலையங்களில் அனைத்து மாணவ, மாணவியர்களும், ஆசிரியர்களும் முககவசம் அணிந்து வருவதை பள்ளி, கல்லூரி நிர்வாகம் உறுதிபடுத்திட வேண்டும். மேலும், கூட்ட நெரிசல் உள்ள பகுதிகளுக்கு சென்று வரும் மக்கள், கொரோனா அறிகுறி தென்பட்டால் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் கட்டாயம் RTPCR பரிசோதனை செய்து கொள்ளவதோடு, பரிசோதனை முடிவு வரும் வரை தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.
எனவே தருமபுரி மாவட்டத்தில் 100% தடுப்பூசி செலுத்துவதை இலக்காக கொண்டு வருகின்ற 08.05.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று தருமபுரி முழுவதும் இருபத்தொன்பதாவது "மெகா தடுப்பூசி முகாம்" 2,286 முகாம்களில் நடைபெற உள்ளது. இதுவரை தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்டு கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இ.ஆ.ப., அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார்.