தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியத்தில் உள்ள 32 ஊராட்சி பகுதிகளில் கடந்த 20 ஆண்டுகளாக பருவமழை பொய்த்துப் போனதால் அணைகள், ஏரி, குளம், குட்டை உள்ளிட்டவைகள் வறண்டு கடுமையான வறட்சி நிலவி வருகிறது. ஆள்துளை கிணறுகளில் சுமார் 1500 அடிக்கும் கீழ் நீர்மட்டம் சென்றுவிட்டதால் இப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. பொதுமக்களுக்கு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் மட்டுமே பிரதானமாக விநியோகிக்கப்பட்டு வருகிறது.
மேலும் பொதுமக்களுக்கும் ஆடு, மாடு கால்நடைகளுக்கு கூடபோதுமான தண்ணீர் கிடைக்காத ஒரு சூழலில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பொதுமக்களின் குடிநீர் தேவை மற்றும் கால்நடைகளுக்கு தேவையான தண்ணீர் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளுக்காக தலா 12.25 லட்சம் வீதம் 1 கோடி ரூபாய் மதிப்பில் 8 திறந்தவெளி கிணறுகள் அமைக்கப்பட்டது.
கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் இந்த சூழ்நிலையில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க பணிகள் முடிவடைந்து ஓராண்டு கடந்தும் திறக்கப்படாமல் உள்ள திறந்தவெளி கிணறுகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
திறந்தவெளிக் கிணறுகளில் மின்மோட்டார் மற்றும் அடிப்படை கட்டமைப்பு கூட இல்லாத ஒரு சூழல் உள்ளது இதை சரிசெய்து உடனடியாக திறந்த வெளி கிணறுகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
No comments:
Post a Comment