தமிழக சட்டப்பேரவையில் வினாக்கள் விடைகள் நேரத்தில் தருமபுரி நகராட்சியுடன் அருகில் உள்ள பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளை இணைத்து தருமபுரியை மாநகராட்சியாக தரம் உயர்த்த அரசு நடவடிக்கை மேற்கொள்ளுமா என்ற கேள்வியை ஜி.கே.மணி எம்எல்ஏ எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு கூறியதாவது:- மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில்தான் நகர்ப்புறங்கள் அதிகம் உள்ளது 2011ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி 45.38 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது 53 சதவீத மக்கள் நகரங்களில் உள்ளனர். மேலும் நகர்ப்புறங்களை அதிக அளவில் உருவாக்க வேண்டும் என்ற இலக்குடன் 6 மாநகராட்சிகள் புதிதாக உருவாக்கப்பட்டதொடு 28 பேரூராட்சிகள் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு இருக்கிறது, 90க்கும் மேற்பட்ட பேரூராட்சிகள் அமைக்கலாம் என்ற கருத்துரு அரசிடம் உள்ளது.
இது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் தமிழகம் முழுவதும் பொருளாதார நிலை, வருமானம் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்து அளிக்கக்கூடிய அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கையை தமிழ்நாடு அரசு மேற்கொள்ளுமென்று பதிலளித்தார்.