அரூர் பேரூராட்சி அலுவலகத்தில் தருமபுரி மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பார்வையாளரும், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநருமான டாக்டர் ஆர்.பிருந்தா தேவி ஆய்வு மேற்கொண்டார்.
தருமபுரி மாவட்டம், அரூர் பேரூராட்சியில் 18 வார்டுகளுக்கு இம் மாதம் 19 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதையடுத்து, அரூர் பேரூராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையினை மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பார்வையாளர் டாக்டர் ஆர்.பிருந்தா தேவி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சின்னங்கள் குறித்தும், இறுதி கட்ட வேட்பாளர்களின் பட்டியல்கள் குறித்தும் அவர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது அரூர் பேரூராட்சியின் தேர்தல் நடத்தும் அலுவலர் ஆர்.கலைராணி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.
.gif)
