தருமபுரி மாவட்டம், அரூர் டவுன் பஞ்சாயத்து அலுவலகம் எதிரில் திங்கட்கிழமை தோறும் நடைபெறும் வார சந்தையில் அனைத்து வகை காய்கறிகள், வெங்காயம், தக்காளி, பூண்டு உள்ளிட்ட வீட்டு சமையலுக்கு தேவையான உணவு பொருட்கள் விற்பனையும், பொங்கலுக்கு முன்பு போகி சந்தை நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு தொடர் மழை காரணமாக மகிழ்ச்சியில் விவசாயிகள் பொங்கல் பண்டிகையை தங்கள் குடும்பத்துடன் கொண்டாட தயாராகி வருகின்றனர். இந்நிலையில் வரும் 14ஆம் தேதி பொங்கல் தொடங்குவதால் இன்று நடைபெற்ற போகி சந்தையில் ஆடு, மாடுகளுக்கு தேவையான அலங்கார பொருட்கள் விற்பனை வைக்கப்பட்டிருந்தனர்.
பொங்கலுக்கு ஆடு, மாடுகளை அலங்கரிக்க தேவையான புதிய வகைகளில் வண்ண வண்ண நூல் கயிறுகள், கொம்பு கயிறுகள், திருஷ்டி கயிறு, சங்கு, குஞ்சங்கள், மூக்கனாக்கயிறு, கழுத்தில் அணியும் பலவகை மணிகள், சலங்கைகள், குப்பி, பட்டை சங்கலி, ஜங்கு பட்டை, கலர் பவுடர்கள், பெயிண்ட், வாய்பட்டி, சாட்டை ஆகிய அலங்கார பொருட்களை ஆர்வத்துடன் விவசாயிகள் வாங்கிச் சென்றனர்.
.gif)
