தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள ஒரு நிமிடத்திற்கு 1000 லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட ஆக்ஸிஜன் உற்பத்தி கூடம் மற்றும் பென்னாகரம் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள ஒரு நிமிடத்திற்கு 500 லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட ஆக்ஸிஜன் உற்பத்தி கூடம் ஆகியவற்றை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி,இஆப., அவர்கள் இன்று (07.10.2021) தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்விற்கு தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மரு.டி.என்.வி.எஸ்.செந்தில்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.ஜி.கே.மணி (பென்னாகரம்), திரு.எஸ்.பி.வெங்கடேஷ்வரன் (தருமபுரி) ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ச.திவ்யதர்சினி,இஆப., அவர்கள் பேசும் போது தெரிவித்ததாவது;
கொரோனா இரண்டாம் அலையின் போது பல்வேறு இடங்களில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டது. ஒரு சில மருத்துவமனைகளில் மட்டுமே ஆக்ஸிஜன் உற்பத்தி கூடம் இருந்தது. கொரோனோ மூன்றாம் அலை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு தலைமை மருத்துவமனைகள் என 70 இடங்களில் பி.எம்.கேர் மற்றும் தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன் கூடிய நிதி ஆகியவற்றின் மூலம் ஆக்ஸிஜன் உற்பத்தி கூடங்கள் அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
இதன்படி தருமபுரி மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒரு நிமிடத்திற்கு 1000 லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட ஆக்ஸிஜன் உற்பத்தி கூடமும், பென்னாகரம் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் ஒரு நிமிடத்திற்கு 500 லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட ஆக்ஸிஜன் உற்பத்தி கூடமும் அமைக்கப்பட்டு தற்போது பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. இன்று திறந்து வைக்கப்பட்டுள்ள ஆக்ஸிஜன் உற்பத்தி கூடங்களை மருத்துவமனை நிர்வாகம் முறையாக பராமரித்து மக்களுக்கு தரமான முறையில் நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கிடுவதற்கு பயன்படுத்திட வேண்டும்.
கொரோனோ பரவலை தடுப்பது என்பது மக்களின் ஒத்துழைத்தால் மட்டுமே சாத்தியம் ஆகும். கொரோனோவிலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசி ஒன்றே தீர்வாக அமையும். தருமபுரி மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள தகுதியுடைய 12 லட்சம் நபர்களில் இதுவரை 53% சதவீதம் பேர் மட்டுமே முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.
குறிப்பாக கடந்த 4 வாரங்களாக ஞாயிற்றுக்கிழமை தோறும் கொரோனோ தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. இந்த சிறப்பு முகாம்களில் மட்டும் 1,57,203 நபர்களுக்கு தடுப்பூசி இலவசமாக செலுத்தப்பட்டுள்ளது. 18 வயதிற்கு மேற்பட்ட பொதுமக்கள் சிரமமின்றி கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள மாவட்ட நிர்வாகம் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றது. எனவே, பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசியினை செலுத்திக்கொண்டு, விரைவில் 100% தடுப்பூசி செலுத்திக் கொண்ட மாவட்டமாக தருமபுரி மாவட்டம் உருவாக்கிட அனைவரும் முழு ஒத்துழைப்பு அளித்திட வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்கள்.
இதனை தொடர்ந்து, பென்னாகரம் மாவட்ட மருத்துவமனையில் மருத்துவமனையின் பயன்பாட்டிற்கு ரூ.5.00 இலட்சம் மதிப்பீட்டில் பேட்டரியில் இயங்கும் வாகனத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்கள். இந்நிகழ்வின் போது தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி துணை முதல்வர் மரு.சாந்தி, மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பு மருத்துவர் மரு.சிவக்குமார், வருவாய் வட்டாட்சியர் திரு.இராஜராஜன் (தருமபுரி), திரு. பாலமுருகன் (பென்னாகரம்), உள்ளிருப்பு மருத்துவர் மரு.காந்தி, பொதுப்பணித்துறை (மருத்துவம்) உதவி செயற்பொறியாளர் திரு.சாமிநாதன், துணை இயக்குநர் (காசநோய்) மரு.ராஜ்குமார், முதன்மை மருத்துவ அலுவலர் மரு.ராஜேஷ் கண்ணா, தலைமை மருத்துவமனை மரு.கனிமொழி, பென்னாகரம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.வடிவேலன், திரு.ஜெகதீசன், பென்னாகரம் பேரூராட்சி செயல் அலுவலர் திருமதி. கீதா ஆகியோர் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.