மோடியைக் குற்றவாளி கூண்டில் நிறுத்தி மார்க்சிஸ்ட் கட்சி நூதனப் போராட்டம்!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரூர் பேருந்து நிலையத்தில் மக்கள் விசாரணை மன்றம் நடத்தியது. நிகழ்வுக்கு ஒன்றியக்குழு உறுப்பினர் பி.குமார் தலைமை தாங்கினார்.
கொரோனா நோயிலிருந்து மக்களைக் காக்கத்தவறியது, பெட்ரோல்,டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு மூலம் மக்களை வாட்டி வதைப்பது,பணமாக்கல் திட்டம் என்ற பெயரால் பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார் மயமாக்குவது, புதிய வேளாண் சட்டங்கள் என்ற பெயரால் விவசாயத்தைக் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு காவு கொடுப்பது,சாதி,மத வெறி அரசியல் நடத்துவது, ஜனநாயக உரிமைகளைக் காலில் போட்டு மிதிப்பது போன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து மாவட்ட செயற்குழு உறுப்பினர் இரா.சிசுபாலன், ஒன்றிய செயலாளர் ஆர்.மல்லிகா, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் எஸ்.கே.கோவிந்தன், கே.என்.ஏழுமலை,ஈ.கே.முருகன் ஆகியோர் பேசினர்.
சிபிஎம் மாவட்ட செயலாளர் அ.குமார், சிபிஐ மாவட்ட துணைச்செயலாளர் கா.சி.தமிழ்க்குமரன், விசிக தொகுதி துணைச்செயலாளர் பெ.கேசவன் ஆகியோர் மக்கள் நீதிபதிகளாக இருந்து மோடி அரசின் மீது தீர்ப்பு வழங்கினர்.
நிகழ்வில் மாவட்டக்குழு உறுப்பினர்கள் பி.வி.மாது, சி.வேலாயுதம், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் வி.ஆறுமுகம்,ஏ.நேரு, சி.பழனி, டி.வேடியப்பன், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.