தருமபுரி | செப்டம்பர் 7:
தருமபுரி அரசு கலைக் கல்லூரியின் தாவரவியல் துறைத் தலைவராக பொறுப்பேற்றுள்ள பேராசிரியர் டாக்டர் கோ. பிரபாகரனுக்கு, தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் தருமபுரி மாவட்டத் தலைவர் சுரேஷ் பாராட்டு தெரிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
தருமபுரியில் செயல்பட்டு வரும் அரசு கலைக் கல்லூரி, பெரியார் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் தாவரவியல் உள்ளிட்ட பல்வேறு பாடப்பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன.
டாக்டர் கோ. பிரபாகரன், எம்.எஸ்சி., எம்.பில்., பிஎச்.டி., எஃப்.ஹெச்.ஏ.எஸ்., எம்.ஏ., பி.எட். உள்ளிட்ட பல்வேறு கல்வித் தகுதிகளைப் பெற்றுள்ளார். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பேராசிரியராக பணியாற்றி வரும் இவர், தருமபுரி அரசு கலைக் கல்லூரியின் தாவரவியல் துறையில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வந்தார்.
கடந்த 2019ஆம் ஆண்டு பதவி உயர்வு பெற்று இணைப் பேராசிரியராக பணியாற்றிய டாக்டர் கோ. பிரபாகரன், கடந்த செப்டம்பர் 2ஆம் தேதி முதல் தாவரவியல் துறைத் தலைவராக பொறுப்பேற்றுள்ளார். மேலும், காட்சி வழித் தொடர்புத் துறையின் தலைவராகவும் கடந்த 7 ஆண்டுகளாக பணியாற்றி வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி மற்றும் ஆராய்ச்சிப் பணிகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் இவர், 16-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பிஎச்.டி. பட்டம் பெறுவதற்கு வழிகாட்டியாக இருந்துள்ளார். அவரது கல்வி மற்றும் ஆராய்ச்சிப் பணிகளைப் பாராட்டி, பெங்களூருவில் செயல்பட்டு வரும் இன்டர்நேஷனல் இன்ஸ்டியூட் ஃபார் சோசியல் அண்ட் எகனாமிக் ரீபார்ம்ஸ் நிறுவனம் சார்பில் அப்துல் கலாம் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கல்லூரியில் நீண்டகாலம் அர்ப்பணிப்புடன் பணியாற்றி தாவரவியல் துறைத் தலைவராக பொறுப்பேற்றுள்ள டாக்டர் கோ. பிரபாகரனை பாராட்டும் வகையில், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் தருமபுரி மாவட்டத் தலைவர் சுரேஷ், அவருக்கு சந்தன மாலை அணிவித்து, சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
பேராசிரியர் டாக்டர் கோ. பிரபாகரனின் புதிய பொறுப்பில் கல்வி மற்றும் ஆராய்ச்சித் துறையில் மேலும் பல சாதனைகளை படைக்க வேண்டும் என பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
.gif)

