தருமபுரி:
தருமபுரி நகரம் எம்.ஏ. தங்கவேல் தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, ஸ்ரீ ராமலிங்கேஸ்வரர் – சௌடேஸ்வரி அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு, ஊர் பொதுமக்கள் சார்பில் வளையல், விபூதி, மஞ்சள், மாங்கல்ய கயிறு, குங்குமம், பழங்கள், வெல்லம், வறுகடலை உள்ளிட்ட சீர்வரிசைப் பொருட்கள் அலங்கரிக்கப்பட்டு, ஊர்வலமாக கோவில் வளாகத்திற்கு கொண்டு வரப்பட்டன.
தொடர்ந்து, கோவில் வளாகத்தில் கணபதி ஹோமம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. வேத மந்திரங்கள் முழங்க, மகா தீபாராதனை நடைபெற்றதைத் தொடர்ந்து, ஸ்ரீ ராமலிங்கேஸ்வரருக்கும் சௌடேஸ்வரி அம்மனுக்கும் திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடைபெற்றது.
திருக்கல்யாண வைபவத்தில் தருமபுரி நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் திருக்கல்யாண நிகழ்வை கண்டு களித்தனர். இதனைத் தொடர்ந்து, திருக்கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நடைபெற்ற திருக்கல்யாண வைபவத்தால், தருமபுரி எம்.ஏ. தங்கவேல் தெரு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆன்மிக உற்சாகம் நிறைந்தது.
இவ்விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
.gif)

