தருமபுரி, ஆகஸ்ட் 28:
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு சார்பில் எச்.ஐ.வி/எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்த்தொற்று குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி மற்றும் பேரணி நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் திரு.வே. சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் எச்.ஐ.வி/எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்த்தொற்று தொடர்பான அடிப்படை தகவல்களை அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் செயல்படும் நம்பிக்கை மையங்கள் மூலம் அறிந்து கொள்வது, தன்னார்வத்துடன் இரத்தப் பரிசோதனை மேற்கொள்வது, எச்.ஐ.வி/எய்ட்ஸ் தொற்றுடன் வாழ்பவர்களுக்கு ஆதரவு அளிப்பது மற்றும் அவர்களுக்கு சம உரிமை வழங்குவது உள்ளிட்ட உறுதிமொழியை மாவட்ட ஆட்சியர் தலைமையில் அரசு அலுவலர்கள், கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் பணியாளர்கள் ஏற்றுக்கொண்டனர்.
கையெழுத்து இயக்கம் தொடக்கம்
தொடர்ந்து எச்.ஐ.வி/எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்த்தொற்று குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கையெழுத்து இயக்கத்தை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார். மேலும், ஆட்டோக்களில் எச்.ஐ.வி/எய்ட்ஸ் விழிப்புணர்வு ஒட்டுவில்லைகளை ஒட்டி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இதனைத் தொடர்ந்து பாரதி கலைக்குழு மற்றும் இராமகிருஷ்ணா கலைக்குழுவினர் சார்பில் நடைபெற்ற நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகளை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
250-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு
பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து பாரதிபுரம் வரை நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணியில் 250-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். எச்.ஐ.வி/எய்ட்ஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு அளிப்போம் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி மாணவர்கள் பேரணியாகச் சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
நிகழ்ச்சியில் துணை இயக்குநர் சுகாதாரம் மரு. இராஜேந்திரன், வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெய தேவராஜ், வட்டார போக்குவரத்து ஆய்வாளர் தரணிதரன், தொழுநோய் துணை இயக்குநர் மரு. புவனேஷ்வரி, மண்டல திட்ட மேலாளர் பாலமுருகன், மாவட்ட மேற்பார்வையாளர் உலகநாதன், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு ஆலோசகர்கள் பாலமுருகன், ராஜ்குமார், சரவணன், SEED இயக்குநர் சரவணன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், அரசு மற்றும் தனியார் கல்லூரி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
எச்.ஐ.வி/எய்ட்ஸ் குறித்த தவறான புரிதல்களை நீக்கி, பரிசோதனை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், தொற்றுடன் வாழ்பவர்களுக்கு சம உரிமையும் சமூக ஆதரவும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இப்பேரணி நடைபெற்றது.
.gif)

.jpg)