தருமபுரி, ஆகஸ்ட் 6:
தருமபுரி மாவட்டம் அதியமான் கோட்டையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ காலபைரவர் திருக்கோயிலில், ஆடி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் பக்தி பரவசத்துடன் நடைபெற்றன. விழாவையொட்டி அதிகாலை முதலே சுவாமிக்கு பால், தயிர், சந்தனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து மலர்கள் மற்றும் ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ காலபைரவர், எழில்மிகு திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இந்த விழாவில் தருமபுரி, சேலம் மாவட்டங்கள் மட்டுமின்றி, கர்நாடக மாநிலம் மற்றும் பெங்களூருவிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து, நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றும் வகையில் நெய் தீபம், தேங்காய் தீபம், எலுமிச்சை தீபம் மற்றும் பூசணிக்காய் தீபம் ஏற்றி வழிபட்டனர். கோயில் வளாகம் முழுவதும் பக்தர்களின் வருகையால் ஆன்மிகச் சூழல் நிலவியது.
விழா நிறைவில் கோயில் நிர்வாகம் சார்பில் அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
.gif)

.jpg)