தருமபுரி, ஜூலை 18:
தருமபுரி மாவட்டம் பொம்மிடி – புட்டிரெட்டிப்பட்டி ரயில் நிலையங்களுக்கு இடையே, சுமார் 50 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார். சம்பவம் குறித்து தகவல் அறிந்த ரயில்வே காவல்துறையினர் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். உயிரிழந்தவர் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரித்தும் அவரது அடையாளம் மற்றும் உறவினர்கள் தொடர்பான எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இதையடுத்து, உடல் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் ஆதரவற்ற நிலையில் இருந்த அந்த நபரின் உடலை, ‘மை தருமபுரி’ அமரர் சேவை அமைப்பினர் பொறுப்பேற்று, பச்சியம்மன் கோவில் மயானத்தில் அனைத்து மரியாதைகளுடனும் நல்லடக்கம் செய்தனர்.
இந்த நிகழ்வில் சேலம் இருப்புப்பாதை காவல் நிலைய காவலர் சுதர்சன், மை தருமபுரி அமைப்பின் சதீஸ் குமார் ராஜா, அமரர் சேவை ஒருங்கிணைப்பாளர் அருணாசலம், மருத்துவர் ஸ்ரீகாந்த், கணேஷ் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
‘மை தருமபுரி’ அமரர் சேவை அமைப்பின் மூலம் இதுவரை 227 ஆதரவற்றோரின் உடல்களுக்கு மனிதநேய அடிப்படையில் இறுதிச் சடங்குகள் செய்து நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாக அமைப்பினர் தெரிவித்தனர்.
.gif)

.jpg)