பாலக்கோடு, ஜூலை 29:
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே ஆடுகளுக்கு தழை பறிக்கச் சென்ற விவசாயி ஒருவர் விவசாயக் கிணற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாலக்கோடு வட்டத்திற்குட்பட்ட ஜக்கசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்ராஜ் (55). விவசாயியான இவர், நேற்று ஆடுகளுக்கு தழை பறிப்பதற்காக வீட்டை விட்டு சென்றார். நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால், அவரது மனைவி சின்னவள் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர்.
அப்போது, அருகிலிருந்த விவசாயக் கிணற்றின் கரையில் சின்ராஜின் காலணிகள் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், உடனடியாக பாலக்கோடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் தேடியபோது, சின்ராஜ் உயிரிழந்த நிலையில் கிடந்தது தெரியவந்தது. பின்னர் அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மகேந்திரமங்கலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, உயிரிழப்பிற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
.gif)

.jpg)