தருமபுரி, ஜூலை 16:
தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே, தருமபுரி மாவட்ட விவசாய சங்கம் சார்பில் ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கக் கோரி பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் சக்திவேல் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் தமிழக விவசாய சங்கத்தின் மாநிலத் தலைவர் சின்னசாமி கலந்து கொண்டு பேசுகையில், ஆவின் நிறுவனம் பசும்பாலுக்கு லிட்டருக்கு ரூ.50 மற்றும் எருமைப் பாலுக்கு ரூ.60 கொள்முதல் விலையாக நிர்ணயிக்க வேண்டும் என்றார். மேலும், லிட்டருக்கு ரூ.5 ஊக்கத் தொகை வழங்குதல், பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கப்படும் 1.25 சதவீத மார்ஜின் தொகையை 5 சதவீதமாக உயர்த்துதல், பணியாளர்களுக்கு பணி வரன்முறை மற்றும் ஊதிய உயர்வு வழங்குதல், கால்நடை தீவனத்தை 50 சதவீத மானியத்தில் வழங்குதல் மற்றும் கால்நடை காப்பீட்டை 100 சதவீத மானியத்தில் செயல்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து விவசாய சங்கத்தினர் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர்கள் சுப்பிரமணி, சிவலிங்கம், மாவட்ட பொருளாளர் பழனி, கரும்பு பிரிவு தலைவர் லோகநாதன், மாவட்ட இளைஞரணி தலைவர் வெங்கடேசன், மாவட்ட இளைஞரணி செயலாளர் காமராஜி, கரும்பு பிரிவு செயலாளர் குமார், முன்னாள் பால்வளத் தலைவர் சில்க் சின்னசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பால் உற்பத்தியாளர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.
.gif)

.jpg)