தருமபுரி, ஜூன் 25:
தமிழ்நாடு உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருவதாக தருமபுரி மாவட்ட ஆட்சியர் வே.சரவணன் தெரிவித்துள்ளார். கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் இவ்வாரியத்தின் மூலம் உறுப்பினர்களுக்கு விபத்து ஈட்டுறுதி உதவித்தொகை, இயற்கை மரண உதவித்தொகை, ஈமச்சடங்கு செலவுத்தொகை, கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை, மூக்குக் கண்ணாடி செலவுத்தொகை மற்றும் முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட 8 வகையான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இத்திட்டங்களில் பயன்பெற இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவராகவும், 18 வயது முதல் 60 வயதிற்குள் உள்ளவராகவும் இருக்க வேண்டும். பள்ளிவாசல்கள் மற்றும் மதரஸாக்களில் பணியாற்றும் ஆலிம்கள், பேஷ் இமாம்கள், அரபி ஆசிரியர்கள், மோதினார்கள், பிலால்கள் மற்றும் இதர பணியாளர்கள், மேலும் தர்காக்கள், அடக்கஸ்தலங்கள், தைக்காக்கள், ஆஷூர்கானாக்கள் மற்றும் முஸ்லிம் அனாதை இல்லங்களில் பணியாற்றும் முஜாவர்கள் உள்ளிட்டோர் உறுப்பினர்களாக பதிவு செய்ய தகுதியுடையவர்கள். உறுப்பினர் பதிவு மற்றும் நலத்திட்ட உதவிகள் பெறும் நடைமுறையை எளிதாக்கும் வகையில் பிரத்யேக இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உறுப்பினர் பதிவு மற்றும் நலத்திட்ட உதவிகளுக்கான விண்ணப்பங்களை இணையவழியில் சமர்ப்பிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் வே.சரவணன் தெரிவித்துள்ளார்.
.gif)

.jpg)