தருமபுரி, ஜூன் 25:
கிறித்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்களுக்காக செயல்பட்டு வரும் கிறித்துவ தேவாலய பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருவதாக தருமபுரி மாவட்ட ஆட்சியர் வே.சரவணன் தெரிவித்துள்ளார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் இவ்வாரியத்தின் மூலம் உறுப்பினர்களுக்கு விபத்து ஈட்டுறுதி உதவித்தொகை, இயற்கை மரண உதவித்தொகை, ஈமச்சடங்கு செலவுத்தொகை, கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை, மூக்குக் கண்ணாடி செலவுத்தொகை மற்றும் முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட 8 வகையான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இத்திட்டங்களில் பயன்பெற கிறித்துவ மதத்தைச் சேர்ந்தவராகவும், 18 வயது முதல் 60 வயதிற்குள் உள்ளவராகவும் இருக்க வேண்டும். கிறித்துவ தேவாலயங்களில் பணியாற்றும் உபதேசியார்கள், வேதியர்கள், சீஷப்பிள்ளைகள், பாடகர்கள், கல்லறை பணியாளர்கள், கிறித்துவ அனாதை இல்லங்கள் மற்றும் தொழுநோயாளியர் மறுவாழ்வு இல்லங்களில் பணிபுரியும் பணியாளர்கள் உள்ளிட்டோர் இவ்வாரியத்தில் உறுப்பினர்களாக பதிவு செய்து நலத்திட்ட உதவிகளை பெற தகுதியுடையவர்கள்.
உறுப்பினர் பதிவு மற்றும் நலத்திட்ட உதவிகளை பெறும் நடைமுறையை எளிதாக்கும் வகையில் பிரத்யேக இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உறுப்பினர் பதிவு மற்றும் நலத்திட்ட உதவிகளுக்கான விண்ணப்பங்களை இணையவழியில் சமர்ப்பிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் வே.சரவணன் தெரிவித்துள்ளார்.
.gif)

.jpg)